லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 1
"என்னடா இவன், ஐரோப்பிய நாடுகளைப் பத்தி எழுதப்போறேன்னு சொல்லிட்டு லல்லு தேசம்னு ஆரம்பிச்சுட்டான்"னு பாக்குறீங்களா? புத்தகங்களில் முன்னுரை வருவதுபோல் இதுவும் ஒரு முன்னுரை . சற்றுப் பெரிய முன்னுரை. நான் ஐரோப்பா செல்லக் காரணமாயிருந்த நிகழ்வு இது என்று கூடச்சொல்லலாம்.
தற்போது நான் பணிபுரியும் நிறுவனத்தில் இணைவதற்கு முன் சென்னையில் இருக்கும் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பயிற்சியாளனாக (Engineer Traninee) அலுவல் செய்து கொண்டிருந்தேன். R & D பிரிவில் வேலை . எனவே தினமும் R&D தான் (Reading and Dreaming) . செல்பேசியின் பயன்பாடு பரவலாகப் பிரபலமாகத் துவங்கிய நேரம். CDMA -WLL (wireless local loop) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது சென்னையில் Reliance நிறுவனம் அளிக்கும் சேவை இந்த CDMA வகைதான். GSM போல் CDMA -யும் ஒரு கம்பியில்லா தொழில் நுட்பமே (wireless technology). ஐரோப்பிய நாடுகளின் கண்டுபிடிப்பு GSM . CDMA அமெரிக்கர்களின் தொழில் நுட்பம்.
GSM சேவைகளுக்கு இந்தியாவில் அனுமதி தந்தபின் CDMA நெட்வொர்க்குகள் பற்றியும் நமது அரசு யோசித்தது. குறிப்பாக கிராமப் புறங்களுக்கு CDMA மிகச் சிறந்த தொலைபேசித் தீர்வாகும். இதைச் சோதனை செய்து பார்க்க எங்கள் நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தது. நகரம் ஒன்றிலும் கிராமம் ஒன்றிலும் பரிச்சார்த்த அடிப்படையில் இரண்டு நெட்வொர்க்குகள் அமைக்க முடிவானது. சென்னையில் ஒரு சோதனை நெட்வொர்க் அமைத்து ஐந்து மாதங்கள் அதன் செயல்பாடுகள் ஆராயப் பட்டன. அப்போது கிடைத்த அனுபவங்கள் குறித்து ஒரு தொடர்கதையே எழுதலாம். வேறொரு சமயம் அது பற்றி எழுதுகிறேன்.
சென்னையில் வேலைகள் முடிவடைந்தன. கிராமம்?
அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் ராம் விலாஸ் பாஸ்வான். பீஹாரில் சோதித்துப் பார்க்கச் சொல்லிவிட்டார். எங்களுக்கு வந்தது சோதனை. பாஸ்வானின் தொகுதியான ஹாஜிபூரில் சோதனை நெட்வொர்க் அமைக்க முடிவானது. எனக்குக் கிலி பிடித்தது. லல்லுவின் ராஜ்யத்தில் ஒரேயடியாக ஆறு மாதங்களா? நல்ல வேளையாக , சுழற்சி முறையில் ஒரு மாதம் சென்னையிலும் ஒரு மாதம் பிஹாரிலும் பணிபுரிய எங்கள் மேலதிகாரி திட்டம் வகுத்தார். முதலில் எனது சகாக்கள் இருவர் சென்று வேலைகளை ஆரம்பித்தனர். அடிக்கடி எனக்கு தகவல்கள் அளித்தவண்ணம் இருந்தனர். நான் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. பிஹாரில் மாநிலத் தேர்தல் நேரம் அது. நிறைய வன்முறைச் செய்திகள் பயமுறுத்தின. போதாக்குறைக்கு என் சகா வேறு , "இன்று ஒருவர் எங்களின் தொலைபேசி இணைப்பக அறைக்கு வந்து முதன்மைப் பொறியாளர் எங்கே என்று விசாரித்தார், அவரது உதவியாளர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்" என்றெல்லாம் கூறி , என்னை விரைவாக வந்து சேரும்படி அன்பாக அழைப்பு விடுத்தான்.
இறுதியாக நான் கிளம்பும் நாளும் வந்தது. நானும் எனது சகா மற்றொருவனும் கிளம்பினோம். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் , வழியனுப்ப எனது நண்பர்கள் வந்திருந்தனர். அமெரிக்காவில் படிக்கும் நண்பன் நாரி( நாராயணன்), " எப்போதாடா பிஹார் போய்ச் சேர்வாய்?" என்று கேட்டான். குறைந்தது ஒன்றரை நாட்கள் என்றேன். அதற்குள் அவன் அமெரிக்கா போய்ச் சேர்ந்துவிடுவானென்று சொன்னான் ( அவனது பயணம் அன்று மாலையில்). லல்லுவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வரும்படி நண்பர்கள் கேட்டுக் கொண்டனர். அனைவரிடமும் விடைபெற்று இரயிலுள் அமர்ந்தேன். பிஹாரை நோக்கி வண்டி கிளம்பியது.
3 Comments:
தமிழ் வலைப்பதிவுகளுக்கு வருக வருக என வரவேற்கிறேன்
ஆர் அண்டு டி க்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துவிட்டு
சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன் என்கிறீர்களே..??
ரொமப்த் தான் தன்னடக்கம் உங்களுக்கு...
வாங்க வாங்க. தீவணம் போடுங்க, காத்துக்கிட்டிருக்கோம் :-)
Post a Comment
<< Home