June 08, 2004

லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 2

பீகாரின் தலைநகரம் பாட்னாவை அடைந்தபோது ஒன்றரை நாட்களுக்கு மேலேயே ஆயிருந்தது. எனது சகா பாபு எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஜன நெரிசலில் நீந்தி இரயில் நிலையம் விட்டு வெளிவந்தோம். நிலையம் மிகவும் அழுக்காய் இருந்தது. "எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாரதி பாடியது போல் "எங்கெங்கு காணிணும் புகையிலை எச்சிலடா" எனப் பாடத் தோன்றியது. சுவர்களில் , இரு சுவர்கள் சந்திக்கும் மூலையில், படிச்சுவர்களில் என எங்கும் சிவப்புச்சாறு. "இதெல்லாம் கண்டுக்காத நைனா" என்றான் பாபு.

இரயில் நிலையத்தின் வெளியே ஆட்டோக்களின் அணிவகுப்பு. நிறைய சைக்கிள் ரிக்க்ஷாக்களும் காணமுடிந்தது.ஒரு ஆட்டோவில் ஏறி எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதிக்குப் பயணம் ஆரம்பித்தோம். அவ்வளவுதான். என் எலும்புகள் இடம் மாற ஆரம்பித்தன. சென்னையின் ஆட்டோக்களுக்கு ஓரளவு பழகியிருந்தாலும் பாட்னாவின் சாலைகள் படுபள்ளமாயிருந்தன. ஒரு மாநிலத் தலைநகரின் இரயில் நிலையச் சாலை இவ்வளவு மோசமாக நான் பார்த்ததில்லை. கடந்த தேர்தலில் நமது லல்லு என்ன சொல்லியிருந்தார் தெரியுமா? " பீஹார் மாநிலச் சாலைகளை ஒரு நடிகையின் முகம் பளபளப்பது போல் மிளிரச் செய்வேன்".விடுதி சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம். ஆட்டோவுக்கு எவ்வளவு ஆயிற்று தெரியுமா? தலைக்கு மூன்று ரூபாய் என்று ( நாங்கள் மூன்று பேர்) ஒன்பது ரூபாய். எனக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது. சென்னையிலிருந்து யாரும் பாட்னாவிற்கு ஆட்டோ ஓட்டிப் பிழைக்க வரவில்லை என நினைத்துக் கொண்டேன்.

விடுதி வசதியாகத்தானிருந்தது. அறையிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் அனைத்து வகை சாடிலைட் சேனல்களும் வந்தன. தமிழும் இருந்தது. அகபேசியில்(intercom) சொன்னவுடன் ,விடுதியுடன் இணைக்கப் பட்டிருந்த உணவகத்திலிருந்து உணவும் விரைவாகக் கிடைத்தது. நாங்கள் பணிபுரியச் செல்லவேண்டியிருந்த இடமான ஹாஜிபூரில் உணவகங்கள் சரியில்லை என்பதால் மதிய உணவும் இங்கிருந்தே எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஹிந்தி எனக்குத் தெரியாது. எனவே எல்லா இடங்களிலும் திணறினேன்

ஹாஜிபூர் - பாட்னாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு சிறு நகரம். சாலைகள் புதிதாயிருந்தன. பாட்னாவிலிருந்து ஹாஜிபூர் செல்ல சரியான அரசுப் பேருந்துகள் இல்லை. தனியார் பேருந்துகள்தான். பயணச் சீட்டு தரமாட்டார்கள். நடத்துனர் என்று சொல்லக் கூடிய ஒருவர் வந்து பேருந்திலமர்ந்திருக்கும் அனைவரிடமும் பணம் வாங்கிச் செல்வார். பயணச்சீட்டின் விலை சில நாட்களில் வேறுபடும். இருக்கை கிடைக்காமல் நின்றுகொண்டே பயணிப்போர் சில சமயம் நடத்துனரிடம் " உட்கார்ந்து பயணம் செய்தாலும் நின்றுகொண்டே பயணம் செய்தாலும் ஒரே ரேட்தானா? குறைந்த பணமே தரமுடியும்" என்றுகூறி விவாதத்தில் ஈடுபடுவர். எனக்கு அரைகுறையாய்ப் புரியும். நடத்துனர் இதற்கு ஒத்துக் கொள்ள மறுத்து " இந்த வண்டிக்கு நான் கண்டக்டரா, இல்ல நீயா" என்று எதிர்வாதம் புரிவார். அவ்வப்போது அடிதடியும் உண்டு. ஓட்டுனரும் தன் பங்கிற்கு , பேருந்தைச் சற்று ஓரங்கட்டிவிட்டு அடிதடியில் இறங்கும் வழக்கமும் உண்டு. பேருந்து புறப்படும் நேர அட்டவணையும் கிடையாது. வரிசையாகப் பேருந்துகள் வந்து நிற்கும். முதலில் நிற்கும் வண்டியுள் ஏறிக்கொள்ள வேண்டும். வண்டி நிரம்பியதும் கிளம்பி விடவேண்டும். ஓட்டுனர் சற்றுத் தாமதித்தால் அவ்வளவுதான். அடுத்த வண்டியின் நடத்துனர் வசை பாடிக்கொண்டே முன் நிற்கும் வண்டியைத்தட்டி இசை போடுவார்.

பேருந்தில் செல்லப் போரடித்தால் நாங்கள் ஆட்டோவில் பயணிப்போம். சென்னையில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் போல்தான் இருந்தன. ஆனால் மிகவும் குறுகலாக இருந்தன. ஐந்து பேர் மட்டும் செல்லக்கூடிய அந்த வண்டியுள் குறைந்தது எட்டுப்பேரைத் திணித்துக் கொண்டு செல்லுவர். இப்படியெல்லாம் நாங்கள் அவதியுறுவதை அறிந்த எங்கள் மேலதிகாரி ஒரு மகிழ்வுந்தை ( அட, கார் தாங்க!) வாடகைக்கு அமர்த்திக்கொள்ளச் சொல்லிவிட்டார்.
ஹாஜிபூரின் மையத்தொலைபேசி இணைப்பகத்தில் தான் எங்களது CDMA நெட்வொர்க் அமைக்கப்பெற்றிருந்தது. இதன் மூலம் ஹாஜிபூரைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் வரை செல்பேசிச் சேவை அளிக்கமுடியும். அதன் செயல்பாட்டைச் சோதிக்க , அடர்ந்த காடுகளுக்கு மத்தியலமைந்த கிராமங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது. திருடர்பயம் நிறைந்த பகுதி அது. காரில் சென்றால் வழிமறித்து , சட்டை, பேண்ட் உட்பட அனைத்தையும் பறித்துக் கொள்ளும் திருடர்கள் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

1 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்...

Bihar'a nallave suthikattuveengannu ninaikiren.. Waiting eagerly for the next post.

R.Balu

7:36 PM  

Post a Comment

<< Home