June 10, 2004

லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 3

பாட்னாவின் வடகரையில் ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறது கங்கை நதி. பீஹாரை இருபுறமாகப் பிரித்து வைப்பதும் கங்கையே. நதியைக் கடந்து வடப்புறம் சென்றால் ஹாஜிபூர். நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலம் உலகிலேயே நீளமான ஆற்றுப் பாலங்களில் ஒன்று.மஹாத்மா காந்தி சேடு(Setu) எனப்பெயர் சூட்டப்பட்ட பாலமிது. சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை தினசரி காலையிலும் மாலையிலும் கடந்து செல்வதே சுகானுபவந்தான். குறிப்பாக காலை வேளைகளில் செல்லும்போது ஆறு முழுவதும் பனிப்புகை போர்த்திக்கொண்டு இளஞ்சூரிய வெயிலில் குளிர்காய்வது இனிய காட்சி. இந்தப்பகுதியில் நதியின் குறுக்கே இன்னும் இரயில் பாலம் எதுவும் கட்டப்படவில்லை.

நான் அங்கு தங்கியிருந்த நேரம் தேர்தல் திருவிழா நடைபெற்ற நேரம். தேர்தல் நடக்கும் தேதிகளில் கலவரங்கள் நிகழ வாய்ப்பிருப்பதால் விடுதியை விட்டு வெளியேற வேண்டாமென்று எங்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது.தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இரண்டு நாட்கள் அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தோம்.ஒவ்வொரு சேனலாக மேய்ந்ததில் தட்டுப்பட்டது "ஹே ராம்". படம் வெளிவந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள்தானிருக்கும். அதற்குள்ளாக கேபிளில் திருட்டுத்தனமாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். நம்ம ஊர் போல்தான் இங்கும் என நினைத்துக் கொண்டேன்.தேர்தலின்போது நிறைய வன்முறைகள்தான். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலவரத்தில் இறந்ததாகச் செய்தி அறிந்தோம். வழக்கம் போல் லல்லுதான் வென்றார். எவ்வளவு ஊழல் செய்தாலும் எத்தனை பேர் குறை சொன்னாலும் தானே ராஜா என நிரூபித்தார். கடைக்குப் போய்த்திரும்பிய சகா லல்லுவைத் தெருவில் பார்த்ததாகக் கூறினான். வெற்றிக் களிப்பில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தாராம்.அச்சமயம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட கல்லூரிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தனர். காரணம் என்னவென்றால்,மருத்துவம் படிக்கும் லல்லுவின் புதல்வி பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவியாய் ரேங்க் எடுத்ததாக அறிவித்ததுதான்.லல்லு இந்தப் போராட்டத்திற்கும் அசரவில்லை.

அலுவல் நாட்களில் மதிய உணவிற்குப்பின் ஹாஜிபூரின் வீதிகளில் ஒரு சிறிய நடை மேற்கொள்வோம் . மிகவும் அழுக்கான வீதிகள், ஈ மொய்க்கும் பண்டங்கள், புழுதிபறக்கும் சாலைகள் என ஏமாற்றம் அளித்தன. தெரியாத்தனமாய் ஒருநாள் டீக்கடையொன்றில் தேநீர் பருக அமர்ந்தோம். அங்கே கொடுக்கப்பட்ட தேநீர் ஒன்றில் கோழி இறகு ஒன்று மிதந்துகொன்டிருந்தது. சில நாட்களுக்கு தேநீர் பருகுவதை மறப்பதென்று முடிவு செய்தோம்.

பாட்னாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் புத்தகயா இருந்தது. நாலந்தாவும் அருகில்தான். இவற்றையெல்லாம் பார்த்துவிடலாம் என்ற என் எண்ணத்தில் மண் விழுவதுபோல் உடல்நிலை சற்று மோசமாக ஆரம்பித்தது. முதலில் சிறிது காய்ச்சல் இருந்தது . நான் தங்கியிருந்த விடுதி வரவேற்பாளரிடம் கேட்டு அருகிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். பெரிய கூட்டம். என்னைப் பார்த்ததும் ஒருவர் ஏதோ கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மருத்துவரைப் பார்க்கவேண்டுமென்று ஆங்கிலத்தில் கூறினேன். நூறு ரூபாய் என்றார். எடுத்துக் கொடுத்த அடுத்த நிமிடம் நான் மருத்துவரைப் பார்க்க அனுமதிக்கப்ப்பட்டேன்.மருத்துவர் என்னை மதறாஸியா என்று கேட்ட வண்ணம் , வலிக்க வலிக்க இரண்டு ஊசிகள் போட்டார். ஏகப் பட்ட மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். மீண்டும் மறுநாள் வரச் சொன்னார். பின்வந்த நாட்களில் உடல்நிலை இன்னும் மோசமானது. பயந்துபோன எனது மேலதிகாரி சென்னைக்குத் திரும்பிவிடச் சொன்னார்.உடல்நிலை உடனே கொஞ்சம் சீரானது. இதற்குள் எனது மூத்த சகா திரு. இரத்தினம் பிகார் வந்து சேர்ந்தார். அடுத்த வாரம் பயணம் உறுதிசெய்யப் பட மீண்டும் ஒன்றரை நாள் (தனியாகப்) பயணம் செய்து சென்னைப் பட்டணம் திரும்பினேன். வேலையும் அரைகுறையாய் முடித்து , ஒழுங்காய் ஊர் சுற்றவும் முடியாமல் எனது பிஹார் பயணம் பயனின்றி முடிவுக்கு வந்தது








1 Comments:

Blogger குசும்பன் சொல்கிறார்...

"லல்லுவின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா" பாடிவிட்டு யெங்கேயப்பா போனீர்...?

5:01 AM  

Post a Comment

<< Home