June 15, 2004

டக்கவ் மரண முகாம் - 1



ஜெர்மனியின் மியூனிக் நகரிலிருந்து இருபது நிமிட இரயில் பயணம் செய்தால் டக்கவ் (Dachau) எனும் சிறிய புறநகர்ப்பகுதியை அடையலாம். மிக அமைதியான அந்த இடத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சின்னம் இரத்தத்தை உறைய வைக்கும் செய்திகள் நிறைந்தது. ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தரவுச்செறிவு முகாம்கள் நிறுவப்பட்ட இடங்களுள்(Concentration Camps) டக்கவ்- வும் ஒன்று. நாம் சற்றுப் பின்னோக்கிப் பயணித்து ஹிட்லரின் காலத்திற்குச் செல்வோம்.

1933-ல் ஜெர்மனியின் அதிபராக முடிசூட்டிக்கொண்டவுடன் தனது அரசியல் எதிரிகளையும், தன்னை எதிர்ப்பவர்களையும் ஒடுக்க நினைத்து , ஹிட்லர் ஆரம்பித்த சிறைகள்தாம் இந்தச் செறிவு ( அல்லது கட்டுப்பாடு) முகாம்கள். ஹிட்லரின் முதன்மைக் காவல்துறை அதிகாரியான் ஹிம்லர் இந்த முகாம்கள் அமைவதில் பெரும்பங்கு வகித்தவர். ஜெர்மனியின் பல இடங்களில் முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டு , ஜெர்மனியின் சிறப்புக் காவல்படையான Schutzstaffel (SS- State within State) இம்முகாம்களில் சிறைவைக்கப் பட்ட கைதிகளைக் கண்காணித்து வந்தது.

முதலில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் கைதிகள் மட்டும் அடைக்கப் பட்டனர் . பின்னர் பல நாடுகளைச் சேர்ந்த யூதர்கள், போர்க்கைதிகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போனது. டக்கவில் உள்ளது சற்றுப் பெரிய முகாம்தான். இந்த முகாமைச் சுற்றிலும் பெரிய கோட்டைச் சுவர்,யாரும் தப்பிச் சென்றுவிடாதபடி அதை ஒட்டிய அகழி , மேலும் மின்சார வேலியும் உண்டு. யாரும் தப்ப முயன்றால் மின்சாரம் தாக்கி மரணம்தான். சித்திரவதை தாங்க முடியாத கைதிகள் பலர் தாமே ஓடிவந்து மின்சார வேலியில் விழுந்து உயிர் துறப்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. ஏழு உயரமான கண்காணிப்புக் கோட்டைகள். அதனுள் அமர்ந்து கொண்டு காவலர்கள் இரவும் பகலும் கைதிகளின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தனர்.



முகாமின் நுழைவாயில் ஒரு பெரிய இரும்புக் கதவு.அதில் " Arbeit Macht Frei" என்ற ஜெர்மன் வாசகம். அதன் பொருள் " வேலை செய்வதே சுதந்திரம்".



ஒரு பெரிய திறந்தவெளி மைதானம்.கைதிகள் தினமும் அந்த வெட்டவெளியில் நிறுத்தப்பட்டு வருகைப்பதிவு போல இருப்புப் பதிவு நடத்தப்படும். தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுங்குளிரைப் பொறுத்துக் கொண்டு கைதிகள் நிற்க வேண்டும். பலர் சோர்வடைந்து விழுவதுண்டு. சிலர் இறந்து போவதுமுண்டு.



கைதிகள் அனைவரும் ஓயாது உழைக்க வேண்டும். ஹிட்லரின் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஆயுதத் தயாரிப்பில் கடினமான வேலைகள் கொடுக்கப் பட்டன. சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளும் உண்டு. எவ்வளவு வேலை செய்தாலும், கைதிகளுக்கு குறைந்த உணவே அளிக்கப்பட்டது. அதாவது, " எதிரிகளைச் சிறைப்படுத்து; அவர்களுக்குக் குறைந்த உணவளி ; அவர்கள் உடலில் மிஞ்சியிருக்கும் ஒரு சொட்டு சக்தி தீரும் வரை வேலை கொடு ; அவர்களின் உடல்வலு தீர்ந்து உபயோகமில்லாமல் போனால் கொன்று விடு" என்பதே ஹிட்லரின் காவலாளிகளுக்கு இடப்பட்டிருந்த எழுதப்படாத விதி.

மைதானத்தை ஒட்டி நீளமாய்ப் பல அறைகள்-கைதிகள் இரவில் தங்குவதற்கு. குளிர்காலங்களில் அறையைக் கதகதப்பாக்கும் வெப்பமூட்டுவான்கள் (Heaters) இல்லை. குளிரில் நடுங்கியபடிதான் கைதிகள் தூங்கவேண்டும். படுப்பதற்கு மரத்தில் அமைக்கப் பட்ட மரப் படுக்கைகள்.ஒன்றின் மேல் ஒன்றாக மூன்றடுக்குக் கட்டில்கள்( நம்மூர் ரயில்களில் உள்ளது போன்று). ஒரு கட்டிலில் மூன்று பேர் படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பேர் படுத்தாலே சிரமமாயிருக்கும் அக்கட்டிலில் மூன்று பேர் படுத்தால் எப்படி இருக்கும்? பின் வந்த நாட்களில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நெரிசலும் அதிகமானது. இரவு வேளைகளில் கைதி அறைகளில் சத்தமோ சச்சரவோ ஏற்பட்டால் அவ்வளவுதான். சம்மந்தப்பட்ட அனைவரும் இரவு வேளையை அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே கழிக்கவேண்டியிருக்கும் அல்லது காவலாளியின் முள்தடிக்கு (இரும்பால் ஆனது) முதுகு காட்ட வேண்டியிருக்கும். படுக்கையறைகளை ஒட்டி குளியலறை மற்றும் கழிப்பறை. அவர்கள் பயன்படுத்திய குளியல் தொட்டிகள் சிதைந்த நிலையில் இன்னும் இருக்கிறது. சில வேளைகளில் கைதிகளாய் அடைபட்டிருந்தவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளவும் அத்தொட்டிகள் பயன்படுத்தப் பட்டன.



இந்த அறைகளுக்குச் சற்றுத் தொலைவில் பதுங்கு அறைகள் (Bunker Rooms) நிறைய இருந்தன. இந்த அறைகள் வி.ஐ.பி கைதிகளுக்கு. பாதிரியார்கள் , எதிக்கட்சித் தலைவர்கள் போன்றோருக்கான சிறை இது. நமது ஊர்ப் பேருந்து நிலையங்களிலோ இரயில் நிலையங்களிலோ நாம் காணும் கழிவறைகளை விடச் சற்றுப் பெரியவை. இவ்வறைகளுக்கு சன்னல் கிடையாது . நாள் முழுக்க இருட்டுதான். இந்தவகைச் சிறையில் அடைக்கப் பட்டவர்கள் வேலை செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்கப் படும் சிறு உணவை உண்டுவிட்டு இருட்டறைகளிலேயே அடைந்துகிடக்க வேண்டும். இவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்ல எப்போதாவது அனுமதிக்கப்பட்டது.




3 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) சொல்கிறார்...

இவை சுவையான தகவல்கள் என்று சொல்லமுடியாது வேதனையான சம்பவங்கள் தந்ததற்கு நன்றி

6:02 AM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) சொல்கிறார்...

have u heard/read of Anne Frank?

4:35 PM  
Blogger எழில் சொல்கிறார்...

ஆம்ஸ்டர்டாம் சென்றிருந்த போது அன்னே ப்ரான்க் நினைவகம் செல்ல நினைத்து நேரமின்மையால் அங்கு செல்லவில்லை. மீன்டும் ஆம்ஸ்டர்டாம் செல்கையில் அங்கே செல்லத் திட்டமிட்டுள்ளேன்.

ஈழநாதன்: ஒன்பது வகைச் சுவைகளுள் அவலச்சுவையும் ஒன்றுதானே?

11:37 PM  

Post a Comment

<< Home