June 29, 2004

ஹன்ஸ் குகைகள் - 2



சுண்ணாம்புப் பாறைக்குகைகளின் அமைப்பும் வளர்ச்சியும் அங்குள்ள நீரின் ஓட்டம் மற்றும் கசிவினைப் பொருத்தது. குகையின் கூரையில் கசியும் நீர் இறுகி தொங்கு பாறைகள் வளருகின்றன. தொங்கு பாறைகள் சிந்தும் நீர் தரையில் பட்டு இறுகி தரையிலிருந்து கொம்புபாறைகள் வளர்கின்றன. பாறைகளின் நிறம் அதில் படும் நீரின் மாசு அளவைப் பொருத்து அமையும். எண்ணற்ற இப்பாறைகள் அனைத்தையும் தொடர்ந்து பார்வையிட்டுக்கொண்டே அங்கிருந்த மரப்படிகளில் மேலேயேறியும் கீழிறங்கியும் வளைந்து நெளிந்த பாதையில் நடந்தோம்.



ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாய்ச் சற்று விசாலமானதாகவும் உயரமாகவும் இருந்தது. அங்கே அமர்வதற்கு பல மர இருக்கைகள் இடப்பட்டிருந்தன. வெகுநேரம் நடந்தவர்கள் சற்று இளைப்பாற அமைக்கப் பட்டவை என எண்ணினேன், ஆனால் வழிகாட்டி எங்கள் அனைவரையும் அழைத்து அவ்விருக்கைகளில் அமரச் சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.மங்கலாய் எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் திடீரென்று இருட்டாயின. சற்று நேரத்தில் குகைக்குள் மெல்லிய சிம்பொனி இசை பரவியது. இசையின் ஒலி பெரிதாகிக் கொண்டே வர, எங்கிருந்தோ வந்த ஒரு லேசர் ஒளிக்கற்றை குகையின் கூரையின் மீதமர்ந்த ஒரு வித்தியாசமான தொங்கு பாறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அடுத்து வந்த மற்றொரு ஒளிக்கற்றை குகையின் பக்கவாட்டுச் சுவரில் படிந்திருந்த இன்னொரு பாறையைத் தாக்கியது. இப்படியாய் இசையும் ஒளியும் இணைந்து அங்கிருந்த விதவிதமான பாறைகளைக் கண்களுக்கு விருந்தாக்கின. வெவ்வேறு வண்ணங்களில் சிந்திய ஒளியும் , ஏறி இறங்கிய இசையின் ஒலியும் ஒன்றோடொன்று இயைந்து ஒரு ஒளி ஒலிக்காட்சியைக் கண்ட உணர்வினை உண்டாக்கின.சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்தது இந்நிகழ்ச்சி.



அரங்கத்தைக் கடந்து சென்றவுடன் ஒரு பெரிய நீரோடை . இது ஒரு குற்றாறு . இதன் பெயர் லெஸ்ஸி. குகையடி வழியாக எவ்வாறு இதன் பயணம் நிகழ்கிறது என எண்ணும்போது வியப்பாயிருந்தது. ஹன்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள மலையின் ஓரிடத்தில் யார் கண்ணிற்கும் படாமல் மறைந்து கொள்ளும் லெஸ்ஸி, இந்த இடத்தில் தான் மறுபடியும் முகம் காட்டுகிறது. இதன் பாதையைத் தேடி மலைக்குகைக்குள் புகுந்தவர்கள் சிலர் அதன் பிறகு வெளிவரவே இல்லையாம்.நதிநீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. நான்கு பாகை செல்சியஸ் குளிர்நிலை. நிலமட்டத்திலிருந்து 60 மீட்டர் ஆழத்தில் ஓடும் ஆறு இது. சிறிய படகுகள் மிதந்துகொண்டிருந்தன. அனைவரும் அதில் ஏறி அமர்ந்தோம். பார்ப்பதற்குச் சிறிய படகு போல் தெரிந்தாலும், நிறைய இருக்கைகள் (நீட்டி மடக்கும் மரப்பலகைகள்) இருந்தன.படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய , வெளியுலகு புலப்பட்டது. அந்நேரத்தில் "படார்" என ஒரு வெடியொலி. திடுக்கிட்டுத் திரும்பினால் " குகை சென்று மீண்டதை" உணர்த்தும் வகையில் வெடிக்கப்படும் வெடி என்றனர். நீள நீளமான குகைப்பாறைகள் இன்னமும் கண்முன் விரிந்துகொண்டிருக்க எங்களது பயணம் நிறைவுற்றது. இம்மலைக்குகைகள் பற்றிய காட்சியகம் ஒன்றும் இங்கே உண்டு.



இந்த மலைக்குகையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் உண்டு. கூண்டுகளுக்குள் அடைத்து வைத்த விலங்குகள் இல்லை அவை. சுதந்திரமாய் வனப் பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகள்.பெரிய வேன் ஒன்றில் பார்வையாளர்களை அடைத்துக் கொண்டு அவ்வனப் பகுதியைச் சுற்றிக் காட்டுகிறார்கள். சரி, இதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி சவாரி மேற்கொண்டோம். முதலில் நாங்கள் சந்தித்த அதிசய விலங்கு எது தெரியுமா? பன்றிகள். . அடுத்து வந்தவை ஆடுகள். பின்னர் மாடுகள், காட்டு நாய்கள் , மான்கள் , குதிரைகள் என வரிசையாய்ப் பல அரிய விலங்கினங்களைக் கண்டு களித்தோம். உடன் வந்தவர்கள் மிகவும் குதூகலித்துக் கொண்டு "வாவ்" என வாய் பிளந்தனர். நானும் என் நண்பனும் "ஆவ்" என்று கொட்டாவி விட்டோம்.இதையெல்லாம் விட பெரிய அதிசயம் , அந்த வனவிலங்ககம் பற்றி எங்களுக்குத் தரப்பட்டிருந்த கையேட்டில் " வன விலங்கில் புது வரவு , அழகான அரிய வகைக் கழுதைகள்" என்று குறிப்பிட்டிருந்ததுதான். தொடர்ந்த பயணத்தில் நாங்கள் இரசித்தது பசுந்தோல் போர்த்திய வனப்பகுதி ,குறுகலாய் வளைந்த பாதைகள் மற்றும் உயர்ந்தோங்கிய மரங்கள் மட்டும்தான்.

நாங்கள் சென்றிருந்த அவ்வேளை "நாட்டுப்புற வாரம் " கொண்டாடப்பட்ட நேரம். பசுப்பையன் (Cow boy) போல் உடையணிந்த பலரும் குதிரைகளில் ஏறி உலா வந்துகொண்டிருந்தார்கள். மாடு மேய்ப்பவர்கள் பயன்படுத்தும் தோலாடைகள், இடைவார்கள் (belt) , தொப்பிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளும் அங்கிருந்தன. உள்ளூர் குழுவினர் நாட்டுப் பாடல்களைப் பாடினார்கள்.

பகல் முழுதும் சுற்றித்திரிந்து களைத்து நாங்கள் இனிய நினைவுகளுடன் திரும்பினோம்

3 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) சொல்கிறார்...

பதிவுகளும் அவற்றுக்கேற்ற படங்களும் அருமை

2:09 PM  
Blogger SnackDragon சொல்கிறார்...

அருமையாய் பதிகிறீர்கள். பழைய பதிவுகளையும் படிக்க வேண்டும்.

9:33 PM  
Blogger Muthu சொல்கிறார்...

எழில்..
அருமையாய் எழுதுகிறீர்கள் ..
குகை பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தவுடன்
இந்தக் குகையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது ..

1:47 PM  

Post a Comment

<< Home