March 14, 2005

பின்லாந்து - 3

தீவுக்கூட்டங்களைச் சுற்றி முடித்துவிட்டு மீண்டும் ஹெல்ஸின்கி செல்லும் படகுக்காய்க் காத்துக்கொண்டிருக்கையில் ஒரு வயதான பாட்டி எங்களுடன் பேச்சுக் கொடுத்தார். "இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டைப் பார்ப்பதற்கா இத்தனை தூரம் வந்தீர்கள்" என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டார். நாங்கள் ஸ்வீடனில் வசிப்பதாய் மறுமொழி சொன்னோம். ஸ்வீடனில் என்ன செய்கிறீர்கள் , எங்கு பணிபுரிகிறீர்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தார். ஸோனி எரிக்ஸனில் பணி புரிவதாய்க் கூறியவுடன் " அப்படியானால் நீங்கள் எங்களது போட்டியாளர்கள்" (செல்பேசி தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நோக்கியா பின்லாந்து நாட்டில் பிறந்த நிறுவனம்) என்று விளையாட்டாய்க் கூறிச் சிரித்தார்.

ஹெல்ஸின்கி நகர் அடைந்து பேருந்து நிலையம் தேடி நடந்து சென்றோம். மார்க்கெட் சதுக்கத்திலிருந்து நேராகச் செல்லும் முக்கிய வீதியில் வழியெங்கும் பச்சை மரங்களும் சிலைகளும் கடந்து செல்ல நடந்து கொண்டிருந்தோம். ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு பின்லாந்திய இசை நிகழ்ச்சி ஒன்றை வழியில் கண்டோம். தொடர்ந்து செல்கையில் ஒரு பெண் நாய், பூனை முதலியவை கொண்டு சிறு சிறு வித்தைகள் காட்டி, கூடிய கூட்டத்தினை மகிழ்வித்துக்க் கொண்டிருந்தாள்.



பேருந்து நிலையம் அடைந்து பொர்வூ (Porvoo) எனும் சிற்றூர் செல்லும் பேருந்தில் அமர்ந்தோம். சுமார் ஒரு மணி நேரப் பயணம். கடல் வழியாகவும் பொர்வூ செல்லலாம் . ஆனால் பயண நேரம் அதிகமாகும். பொர்வூ -வில் நிறைய மர வீடுகள் உண்டு. இவற்றைப் பார்த்து வரவே இந்தப் பேருந்துப் பயணம். வழி எங்கும் கோடைக்கால பசுமை இனிமை சேர்த்தது. ஆனால் பொர்வூ-வை நெருங்குகையில் மேகங்கள் கூடி மழை பொழிந்துவிடப் போவதாய் மிரட்டின.

மேடு பள்ளமான நிலப்பகுதியில் அமைந்த ஊர் இது. சரிவுகளில் வரிசையாய் வீடுகள்; பெரும்பான்மையான வீடுகள் மர வீடுகளே. ஊரின் தென்பகுதியில் ஓடும் ஒரு ஆறு. ஊரின் பெயரே ஆற்றின் பெயர். பொர்வூ ஆறு என்றே அழைக்கிறார்கள். ஆற்றினைக் கடக்க அமைந்த வளைவுப் பாலங்கள் அழகாயிருந்தன. ஆற்றின் வழியெங்கும் இளைப்பாறிக் கொண்டிருந்தன பலவகைப்பட்ட இயந்திரப் படகுகள்.



தொலைவில் மரங்களர்ந்த ஒரு வனப் பகுதி. ஆற்றின் கரையோரத்திலும் நிறைய மரவீடுகள் , வரிசையாய், சின்னச் சின்னதாய் அமைந்திருக்கின்றன. ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்தது. அருகிருந்த மரத்தினடியில் ஒதுங்கிச் சிறிது நனைந்து மழையை ரசித்தோம். சற்று நேரத்தில் மழை தூறலாக மாறவே தொடர்ந்து நடந்து சென்றோம். குறுகலான வளைவான உயர்ந்து இறங்கும் சாலைகள்; சாலைகளின் இருபுறமும் முற்றிலும் மரத்திலேயே அமைந்த வீடுகள் என வித்தியாசமான ஊர்தான். மேடான இடத்தில் அமைந்த ஒரு தேவாலயம் எதிர்ப்பட்டது. ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



தொடர்ந்த தாழ்வான வீதிகளில் இறங்கி, மீண்டும் பேருந்து நிலையம் அடைந்து ஹெல்ஸின்கி திரும்பினோம். பொர்வூவில் பெய்த மழை இங்கில்லை. வானமும் தெளிவாக இருந்தது. வெய்யிலும் சுள்ளென்று சுட்டது. ஹெல்ஸின்கிக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டங்களைப் படகிலிருந்து பார்த்துக்கொண்டே செல்லும் ஒரு படகுச் சுற்றுலா தயாராய் இருக்கவே படகிலேறி அமர்ந்தோம்.



படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாதையில் பயணம் அமைந்திருந்தது. படகில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் ஆங்கிலம், ஸ்வீடிஷ், பின்னிஷ் மற்றும் ஜெர்மனிய மொழிகளில் கடந்து சென்ற இடங்களைப் பற்றிய வர்ணனை வழங்கின. " இடது புறம் நீங்கள் காண்பது, வலது புறத்தில் நீங்கள் காண்பது" என்று சொல்லச் சொல்ல படகில் பயணம் செய்த அனைவரும் வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தோம்.

முதலில் எதிர்ப்பட்டது நாங்கள் ஏற்கனவே பார்த்த சௌமன்லின்னா தீவுக் கூட்டங்கள். அதனைக் கடந்து சென்றால் இன்னொரு தீவு, அதன் பெயர் சான்டாஹமினா(Santahamina). ராணுவ அருங்காட்சியகமும் விலங்குகள் சரணாலயமும் இங்கிருப்பதாய்க் கூறினார்கள். சிறு சிறு தீவுகள் தொடர்ந்து எதிர்ப்பட கடல் சில இடங்களில் குறுகி , தீவுக்கு வழி விடுகிறது. இரண்டு தீவுப்பகுதிகளை இணைக்க ஓரிடத்தில் நகரும் இரும்புப்பாலம் ஒன்றிருக்கிறது. படகுகள் செல்கையில் இப்பாலம் நகர்ந்து வழி விடுகிறது.



படகுகள் கடந்தவுடன் மீண்டும் மூடிக்கொண்டு தீவுகளை இணைக்கிறது. வலப்புறம் காணப்பட்ட அடுத்த பெரிய தீவு லாயசலோ (Laajasalo) . உயர்ந்த பல கட்டிடங்களும் , மரங்களும் தென்பட்டன. கடற்கரை மணல்வெளி சூரியக் குளியலுக்கு ஏற்றது.
வளைந்து நெளிந்த , குறுகலான பாதைகளில் படகு பயணித்துத் திரும்பியது. திரும்பும் வழியில் பெரிய பெரிய கப்பல்கள் நின்று கொண்டிருந்தன.



பனி உடைக்கும் கப்பல்களாம் இவை. குளிர்காலத்தில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் பல பாகை செல்ஸியஸ் குறைந்து விடுவதால் கடல்நீர் இறுகி உறைந்து விடுகிறது. உறைந்த பனிக் கட்டிகளை உடைத்துக் கப்பல் பயணம் மேற்கொள்ளும் பணியினை இக்கப்பல்கள் நிகழ்த்துகின்றன. பல மீட்டர் ஆழம் சென்று பனியினை உடைத்து வழி செய்யும் ஆற்றல் மிக்கவையாம் இந்தக் கப்பல்கள்.
சற்று நேரத்தில் படகு , பயணம் தொடங்கிய மார்க்கெட் சதுக்கத்தை அடைந்து நின்றது. இரவு பத்து மணியான பின்னும் சிறிது சூரிய வெளிச்சம் மிச்சமிருந்தது. முக்கிய வீதியிலிருந்த "நமஸ்கார்" எனும் இந்திய உணவகத்தில் இரவு உணவு உண்டு விடுதி திரும்பினோம்.

அடுத்த பதிவிலும் பின்லாந்து தொடர்கிறது.

1 Comments:

Blogger Unknown சொல்கிறார்...

நன்றி புகைபடம் அருமை

9:04 AM  

Post a Comment

<< Home