September 23, 2004

லக்ஸம்பர்க் - 1



லக்ஸம்பர்க்- மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு குட்டி நாடு. மொத்த மக்கள் தொகையே நாலரை இலட்சம்தான். இரண்டாயிரத்து ஐநூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்நாட்டின் மூன்றின் ஒரு பகுதி வனப்பகுதியாகும். சிறிய நாடென்றாலும் இயற்கை அழகு கொழிக்கும் நாடு இது. ஜெர்மனி, பிரான்ஸ் , பெல்ஜியம் ஆகிய நாடுகள் லக்ஸம்பர்க்-கைச் சூழ்ந்துள்ளன. இதனால் பண்டைய நாட்களில் இந்த நாடுகளுள் ஏதேனும் ஒரு நாட்டுக்குட்பட்ட பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது.
சென்ற வருடம் (கி .பி 2003) ஈஸ்டர் விடுமுறை நாட்களில் லக்ஸம்பர்க் நாடு செல்லத் திட்டமிட்டோம் நானும் எனது மனைவியும். பயணம் திட்டமிடப்பட்ட போது எங்கள் திருமணத்திற்கு நான்கு மாதங்கள் இருந்தன. எனவே " திருமணத்திற்கு முன்னே தேனிலவா?" என்று அனைவரின் கேலிக்கும் ஆளானோம். ஜெர்மனிக்கு அருகில் இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் இல்லாதது என்றே பரவலாக அறியப்பட்டிருந்த நாடு லக்ஸம்பர்க். எனது ஜெர்மன் நண்பர் ஒருவர் இதுவரை அங்கே சென்றதில்லை என்று கூறி எங்கள் பயணம் குறித்து ஆச்சரியம் தெரிவித்தார். மியூனிக் நகரிலிருந்து அந்நாட்டின் விமானம் லக்ஸ் ஏர் (Lux Air) மூலம் பயணம் செய்தோம். சிறிய விமானம். விமானத்தினுள் இருந்த பயணக் கையேட்டினை புரட்டுகையில் சென்ற வருடம் விபத்துக்குள்ளான லக்ஸ் ஏர் விமானத்தைப் பற்றிய செய்தி சிறிது பயமூட்டியது. ஒரு மணி நேரப்பயணம் என்றாலும் , நடுவில் சார்புருக்கன் எனும் ஜெர்மானிய நகரில் இறங்கி ஆட்களை ஏற்றிக்கொண்டு ( டவுன் பஸ் போல) மீண்டும் பறந்தது.

லக்ஸம்பர்க் நாட்டின் தலைநகர் பெயரும் லக்ஸம்பர்க் தான். லக்ஸம்பர்க் நகர் என்று இதனை அழைக்கிறார்கள். பேசும் மொழி லக்ஸம்பர்கிஷ் என்றாலும் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன. நகரின் மொத்த மக்கள் தொகை எண்பதாயிரம். சுமார் இருநூறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனக்கள் இயங்குகின்றன. சிறிதும் பெரிதுமாய் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு வங்கி கண்ணில் பட்டது.

நகரின் மையத்திலிருந்து நடக்க ஆரம்பித்தால் ஒரு சராசரி ஐரோப்பிய நகரின் காட்சிகள் அனைத்தும் இங்கும் வழி நெடுகத் தொடர்கிறது.



வித்தியாசமான சிலைகள் , மியூஸியங்கள் ,தேவாலயங்கள் , அரண்மனைகள், அரண்மனைக்கு வெளியே காவல் செய்யும் சீருடைக் காவலாளிகள் , காவலாளிகள் வேலை முடிந்து அடுத்த காவலாளி பொறுப்பேற்கும் போது செய்யும் அணிவகுப்பு என வழக்கமான காட்சிகள். இளவேனிற்காலம் அப்போதுதான் தொடங்கிய ஏப்ரல் மாதம். அன்றைக்குச் சற்றே குளிராக இருந்தது. அந்தக் குளிரில் விறைப்பாய் நாளெல்லாம் நிற்கும் காவலாளியைக் காண சற்றே பாவமாயிருந்தது.

நகரின் தென்பகுதியிலுள்ள பள்ளத்தாக்கு மிகவும் சுவாரஸ்யமானது. இயற்கையாகவே அமைந்த இப்பள்ளத்தாக்கினைச் சுற்றியும், அதன் உள்ளும் பண்டைய காலத்து மன்னர்கள் நிறைய கோட்டைகள் , மறைவிடங்கள் மற்றூம் தேவாலயங்களை அமைத்தனர். கி பி 963 -ல் கவுன்ட் ஸீக்பீல்ட் எனும் மன்னர் இந்தப் பள்ளத்தாக்கினைச் சுற்றிலும் கற்சுவர்களைக் கட்ட ஆரம்பித்தார்.



எதிரிகள் தாக்குகையில் பதுங்கிக் கொண்டு மறைவிடங்கள் மூலம் திரும்பித்தாக்கும் வண்ணம் கோட்டைகள் கட்ட ஆரம்பித்தனர். இருப்பினும் பின் வந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு லக்ஸம்பர்க் அந்நியர் வசம் இருந்தது. அவர்களும் இந்தப் பள்ளத்தாக்கினுள் பல கோட்டைகள் கட்டினர். நீறூற்றுக்கள், பசும் புல் வெளிகள் ,மரங்கள் , உறுதியான கற்சுவர்கள் , சலசலத்து ஓடும் சிறு ஓடை என்று இன்றும் பழமை மாறாமல் இருக்கிறது. வடக்கு ஜிப்ரால்டர் என்றே இந்த நகருக்குப் பெயர் வந்தது இந்த நில அமைப்பினால் என்கிறார்கள்.



கால்கள் வலிக்கும் வரை( வலித்த பின்னும்) இந்தப் பள்ளத்தாக்கின் மேலும் கீழும் ,கோட்டைச் சுவர்களிலும் சரிந்த பாதைகளிலும் நடந்தோம். இதன் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள பாலங்கள் பல. இவற்றுள் வயடுக்ட் (Viaduct) எனும் பாலம் பழமையானது.இருபத்தி நான்கு வளைவுகள் (Arches) கொண்டது. பாலத்தின் மேலிருந்து பார்க்கும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவது இப்பள்ளத்தாக்கின் அழகுதான்.போன்ட் அடோல்ப் (Pont Adolf) எனும் மற்றொரு பெரிய பாலமும் உண்டு.



சுமார் இருபத்தி மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள மறைவிடம் இப்பள்ளாத்தாக்கில் கட்டப்பட்டதாம். போக் காஸிமேட் (Bock Casemates) எனப்பெயர் பெறும் இந்த குகைப் பகுதி பற்றி அடுத்த பதிவில்.

2 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்...

மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். ஒரே மூச்சில் அத்தனை பதிவுகளையும் படித்துவிட்டேன்.

பாண்டி

8:22 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொல்கிறார்...

ezhil,

vaNakkam!

could you pls drop me a line ?

mathygrps at gmail dot com

thanks ezhil

10:22 PM  

Post a Comment

<< Home