March 22, 2005

பின்லாந்து - 4

பின்லாந்து நாட்டின் தேசிய காவியம் "கலேவலா" பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும் . பின்னிஷ் மொழியிலிருந்து தமிழுக்கு ஆர். சிவலிங்கம் என்கிற உதணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட நூலையும் பலர் படித்திருக்கலாம். மதுரைத்திட்டத்தின் தொகுப்பில் இப்புத்தகம் இடம் பெற்றுள்ளது. எனினும், கலேவலா பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்: நீண்ட நெடுங்காலமாய் ஸ்வீடனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக பின்லாந்து இருந்து வந்தது. ஆட்சி மொழி ஸ்வீடிஷ்தான். மக்கள் விரும்பினால் பின்னிஷ் மொழியைப் படித்துக் கொள்ளலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பின்லாந்து இரஷ்யா வசம் ஆனது. பின்னர் ஏற்பட்ட சுய விழிப்புணர்ச்சியினால் தங்களது மொழியின் வேர்களையும் பழைய வரலாறுகளையும் மீட்டு , தமது நாட்டின் தனித்தன்மையை மீண்டும் நிலைநாட்ட விரும்பினர். அதன் முயற்சியால் பின்லாந்தின் பழைய கதைகள், வரலாறுகள், நாடோடிப் பாடல்கள் பல தொகுக்கப் பட்டன. பின்லாந்தின் தூர கிழக்குப் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் வெகு காலமாய் அந்த நாடோடிப் பாடல்களைப் பாடி வருவது அறிந்து அவற்றைத் தொகுத்துக் காவியமாக்க விருப்பம் கொண்டனர். அவ்வாறு தொகுத்தவர்களுள் எலியாஸ் லொன்ராத் (Elias Lönnrot) என்பவர் மிக முக்கியமானவர். அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர் எனினும் தாய்மொழியில் கொண்ட காதலால், மொழிப்பேராசியராகப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பின்லாந்தின் வெகு பழமையான நாடோடிப்பாடல்களை எல்லாம் தொகுக்க எண்ணி பல இடங்களுக்கும் பயணம் செய்தார். அங்கு வாழ்ந்த கிராம மக்கள் பாடிய பாடல்களையெல்லாம் தொகுத்தார். இப்பாடல்களின் தொகுப்பு 1835-ல் வெளியானது. பின்லாந்துப் பள்ளிக்களில் பாடமானது இத்தொகுப்பு. பின்னர் மேலும் பல பாடல்களைத் தேடிச் சேகரித்த எலியஸ் விரிவான மற்றொரு தொகுப்பை வெளியிட்டார். பின்லாந்து நாட்டின் தேசிய காவியமாக இப்பாடல் தொகுப்பு அறிவிக்கப் பட்டு , கலேவலா நாள் (Kalevala Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28-ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. "லார்ட் ஆப் த ரிங்ஸ்" எழுதிய ஜே. ஆர். ஆர். டால்க்கீன் - அவருக்கு மிகவும் பிடித்த தொகுப்பு கலேவலா. அவரது ஸில்மாரில்லியான் - எனும் புத்தகத்தில் கூட கலேவலாவின் கருத்துக்கள் சிலவற்றைக் காணலாம். இப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்தவர் சிபிலியஸ்(Sibelius) எனும் இசைமேதை. கலேவலா காவியத்தின் பல பாடல்களுக்கு ஓவிய வடிவம் கொடுத்தவர் அக்ஸெலி காலன் கலேலா (Akseli Gallen-Kallela) எனும் புகழ் பெற்ற ஓவியர்.

நிற்க, எங்களது பின்லாந்துப் பயணத்தின் அடுத்த நாள்- அக்ஸெலி காலன் கலேலா வசித்த, தற்போது ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படும் வீட்டிற்குச் சென்று வரப் புறப்பட்டோம். ஹெல்ஸின்கியின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் சிறிய நகரான எஸ்பூ (Espoo) விற்கும் ஹெல்ஸின்கிக்கும் நடுவே தர்வஸ்பா (Tarvaspaa) எனும் இடத்தில் அக்ஸெலி வசித்த வீடு அமைந்திருக்கிறது. ட்ராம் வண்டியொன்றில் ஏறிப் பயணித்தோம். ட்ராம் வண்டியின் கடைசி நிறுத்தத்தில் இறங்கினால் அருங்காட்சியகம் செல்லும் வழியை அம்புக்குறியினால் தெரிவித்து இன்னும் 2.6 கிலோமீட்டர் தொலைவு என அறிவித்திருந்தார்கள். நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அடர்ந்த காடு எதிர்ப்பட்டது. காட்டிற்கருகே , அதனை ஒட்டிய வண்ணம் சலசலத்துக் கொண்டிருந்தது கடல். லாயலஹ்தி விரிகுடா என்றதற்குப்பெயர். சில இடங்களில் கடற்கரை மணல் வெளியும் தென்பட்டது. நாங்கள் சென்ற பாதை மேடு பள்ளமாய் அமைந்திருந்தது. காலை நேரத்தில் சைக்கிளிலும், நடந்தும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற இடம். வழி நெடுக நடையோட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் எங்களைக் கடந்து சென்றனர். ஓரிடத்தில் கடல் மிகக் குறுகலாய் இருக்க அதன் மீது ஒரு மரப்பாலம் . நாங்கள் வந்த பாதை சரியானது தானா என எதிர்ப்பட்ட ஒருவரிடம் விசாரிக்க , அவர் பாலத்தைக் கடந்து மறுபுறம் செல்லும்படி கூறினார். பாலத்தைக் கடந்தவுடன் சற்று விசாலமான சாலைகள். வளைந்து நெளிந்து உயர்ந்து சென்றது. சாலைகளின் இருமருங்கும் பசுமரங்கள் (Spur) ஓங்கி உயர்ந்து நிழல் சேர்த்தன. ஜூலை மாத காலை வெய்யில் சுள்ளென்று சுட்டது. தொடர்ந்த சாலையில் விலகிச் சென்ற ஒரு சரிவான பாதை. இயற்கையோடு இயைந்து வாழ நினைத்தே ஓவியர் அக்ஸெலி இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்திருக்க வேண்டும். இறுதியாய் ஒரு சிறிய வீடு - சிறிய கோட்டை போன்ற அல்லது சிம்னி போன்ற உச்சியைக் கொண்ட வீடு எங்கள் முன் தென்பட்டு , இது தான் நீங்கள் தேடி வந்த காட்சியகம் என்றது.



இவ்வளவு தூரம் கடந்து நாங்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தது அருங்காட்சியக் ஊழியர்களுக்கு வியப்பை அளித்திருக்கக் கூடும், ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள். நுழைவுக்கட்டணம் செலுத்தி வீட்டினுள் நுழைந்தோம். அக்ஸெலியின் வீடு மற்றும் ஓவிய அறையாக-, இரு பயன்பாடுகட்கும் இவ்விடம் பயன்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தைச் சுற்றுப்பார்க்கும் முன் அக்ஸெலி காலன் கலெலாவின் வாழ்க்கையச் சிறிது விரைவாகப் புரட்டிப்பார்க்கலாமா?



1865 -ல் பிறந்த இவர் இளவயதில் ஓவியம் மற்றும் பின்னிஷ் நுண்கலைகள் பற்றிய படிப்பைத் தேர்ந்தெடுத்துக் கற்றிருக்கிறார். பின்னர் பாரிஸ் சென்று அங்கும் ஓவியம் படித்திருக்கிறார். 1890-ல் திருமணம். பின்னர் பெர்லினில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது படைப்புக்கள் பிரசித்தி பெற்றனவாம். 1900 முதல் கலேவலாவின் கதைக்காட்சிகளை ஓவியங்களாய்த் தீட்ட ஆரம்பித்திருக்கிறார். ஹங்கேரி, பிரான்ஸ், ஜெர்மனி, கென்யா போன்ற நாடுகளுக்குப் பயணித்து ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். புதிய பல ஓவிய நுட்பங்களையும் கற்றிருக்கிறார். 1911-ல் இந்த வீடு கட்டப்பட்டது. பின்னர் 1920 -ல் வெளிவந்த கலேவலா- புத்தகத்தை இவரது ஓவியங்கள் அலங்கரித்தன. அமெரிக்காவிற்கு இருமுறை பயணம் செய்து வந்திருக்கிறார். அமெரிக்கக் கலை, கலச்சாரம் பற்றிக் கற்றுத் திரும்பியிருக்கிறார், கலேவலா தவிர பிற ஓவியங்களும் சிற்பங்களும் அமைத்திருக்கிறார். 1931-ல் கோபன் ஹேகன் சென்று திரும்புகையில் உடல்நிலை சீர்கெட்டு ஸ்டாக்ஹோமில் மரணமடைந்தார்.



அருங்காட்சியகத்துள் நுழைந்ததும் முதல் அறை அவர் ஓவிய அறை. சுற்றிலும் பல்வேறு ஓவியங்கள். அவரது உருவத்தை அவரே வரைந்த ஒரு படமும் உண்டு. அவரது மனைவியைய் மற்றும் தாயின் உருவங்களையும் வரைந்திருக்கிறார். வரையப் பயன்படுத்திய அச்சு ஒன்று, லண்டனில் இருந்து தருவித்தது - இன்னும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, அக்ஸெலி ஓவியம் வரையப் பயன்படுத்திய பொருட்கள் பலவும் காணக் கிடைக்கின்றன. ஓவியம் வரையும் சாய்பலகையும் இருந்தது. அந்த அறையைக் கடந்து அடுத்த அறையினுள் கலேவலாக் கதை ஓவியங்கள் ஒன்றிரண்டு தென்பட்டன. கலேவலாக் கதையின் நாயகனான வைனாமொயினன் படகிலேறி வடக்கு நோக்கிச் சென்றதைச் சித்தரிக்கும் ஒரு ஓவியம் இருந்தது.



பின்னர் சுழல் படிகள் ஏறி மாடி அறைக்குச் சென்றால் படிகளை ஒட்டிய ஒரு அறை- குளியல் அறை. அமெரிக்கா சென்று திரும்பியதும் அங்கிருந்த குளியல் அறைகளைப் போல மாற்றி அமைத்துக் கட்டியதாம் இது. உச்சியில் அவரது படிப்பறை. அந்த அறையில் ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் அவ்விடத்தின் இயற்கை அத்தனையும் கண்ணுக்குள் விரிகிறது. அறையினுள் அக்ஸெலி படித்த புத்தகங்கள் சிலவும் அவர் விளையாடப் பயன்படுத்திய பழைய டென்னிஸ் மட்டைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு குட்டி அறை. அதிலும் பல ஓவியங்கள். பின்னிஷ் மொழியில் கலேவலாப் பாடல் வரிகள் எழுதப் பட்டிருக்க அவ்வரிகள் ஓவியமாக்கப்பட்டிருந்தன.



அக்ஸெலி பற்றிய புத்தகங்களும் ஓவியக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களும் நிறைய இருந்தன. ஆனால் அனைத்தும் பின்னிஷ் மொழியில் இருந்தன. அங்கிருந்த உதவியாளரிடம், கலேவலா ஓவியங்கள் இங்கு குறைவாக இருப்பதைக் குறிப்பிட்டோம். ஹெல்ஸின்கி நகரின் மத்தியில் இருக்கும் அட்டெனியம் எனும் கண்காட்சியகத்தில் நிறைய இருப்பதாய்க் கூறினார்.

0 Comments:

Post a Comment

<< Home