April 13, 2005

பின்லாந்து - 5

அக்ஸெலி மியூஸியத்திலிருந்து ஒரு வாடகைக்கார் மூலம் பயணித்து ஒரு பெரிய பூங்காவினை அடைந்தோம். இந்தப்பூங்காவினில் ஒரு நினைவகம் அமைந்துள்ளது. கலேவலாப் பாடல்களுக்கு இசையமைத்த ஜீன் ஸிபிலியஸ்-க்கு (Jean Sibelius)இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.



சற்று வித்தியாசமான நினைவகம்.இசையமைப்பாளருக்கு ,இசைக்கருவியின் வடிவில் ஒரு நினைவுச் சின்னம். ஆர்கன் பைப் (Organ pipe)போன்ற அமைந்த பெரிய பெரிய குழாய்கள். மொத்தம் அறுநூறு குழாய்கள், துருப்பிடிக்காத இரும்பினால் ஆனவை.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு சுமார் பத்து மீட்டர் உயரத்திற்கு பிரம்மாண்டமாய் அமைந்திருக்கின்றது. இத்தனைக்கும் சிபிலியஸ் ஆர்கன் பைப் கொண்டு எந்தவொரு இசைத்தொகுப்பையும் வெளியிட்டதில்லை என்கிறார்கள். இந்த இரும்புக்குழாய்கள் ஒரு பாறை மீது அமைக்கப்பட்டிருக்க அருகே சிபிலியஸின் தலைச் சிலை, அதுவும் துருப்பிடிக்கா இரும்பினால் அமைக்கப் பட்டிருக்கிறது.



தொண்ணூற்று ஒரு ஆண்டுகள் வாழ்ந்து, பின்லாந்தின் தலைசிறந்த இசையமைப்பாளராய் அறியப்படும் ஜீன் சிபிலியஸ் 1957-ல் மரணம் அடைந்தார். ஏழு ஸிம்பொனி இசைத்தொகுப்புகளை வெளியிட்டவர். கலேவலாப் பாடல்களுக்கும் இசை அமைத்துத் தொகுப்புகள் வெளியிட்டார். இவரது மறைவுக்குப் பின் இவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க விரும்பிய சிபிலியஸ் சொஸைட்டி அங்கத்தினர்கள் , சிறந்த சின்னம் வடிவமைக்கும் பொருட்டு ஒரு போட்டியினை அறிவித்தனர். பலத்த போட்டிக்கிடையே எய்லா ஹில்துனென் (Eila Hiltunen) எனும் பெண்மணி வடிவமைத்த , இந்தக் குழாய் வடிவச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்குப் பரவலாய் எதிர்ப்பும் இருந்ததாம். அவரது உருவச் சிலை இதில் இடம் பெற வேண்டுமென பலரும் வற்புறுத்தவே, இந்த வித்தியாச வடிவமைப்புடன் அவரது உருவச் சிலையும் சேர்க்கப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாய் இதனை மிகக் கவனமுடன் வடிவமைத்து 1961-ல் இச்சின்னம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாய் இன்னும் புத்தம் புதிதாய் அந்த நினைவுச் சின்னம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

பூங்காவிலிருந்து வெளியேறி அவ்வழியே சென்ற ட்ராம் வண்டியிலேறி மீண்டும் நகரின் முக்கியப்பகுதியான சந்தைக்கு வந்தோம். ஞாயிற்றுக் கிழமையாதலால் சந்தை பரபரப்பாய் இல்லை. அருகிலிருந்த இன்னொரு தேவாலயம் கண்ணைக் கவரவே அங்கு சென்றோம்.



உஸ்பென்ஸ்கி தேவாலயம் (Uspenski)என்றிதற்குப் பெயர். ரஷ்யர்கள் பின்லாந்தை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டதாம்.கட்டப்பட்ட ஆண்டு 1868. மற்ற ஐரோப்பிய தேவாலயங்களின் கட்டுமான முறையிலிருந்து ரஷ்யர்களின் கட்டுமான முறை வேறுபட்டு அமைந்திருக்குமாம். இந்தத் தேவாலயம் ரஷ்யமுறைப்படி அமைந்த தேவாலயங்களில் பெரிய ஒரு ஆலயம்.

தேவாலயத்தின் கலசம் வெங்காய வடிவிலமைந்தது. மொத்தம் பதிமூன்று கலசங்கள் இதுபோன்று வெங்காய வடிவிலானவை. இயேசு மற்றும் அவரது பன்னிரெண்டு சீடர்களை உணர்த்தும் வகையில் அமைத்திருப்பதாய்ச் சொன்னார்கள். தேவாலயத்திற்குள் வண்ணமயமான பல ஓவியங்கள். இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள் , புத்தம் புதிது போல் பளபளப்பாயிருந்தன.

இது உட்புறம் வழியாகத் தேவாலயத்தின் உச்சியைக் காட்டும் படம்.


பின்னர் ஹெல்ஸின்கியின் முக்கிய வீதிக்கருகிலேயே அமைந்திருக்கும் அட்டெனியம் (Atteneum) எனும் கலைக் கூடத்திற்குச் சென்றோம். பின்லாந்தின் மிகப்பெரிய, சிற்ப மற்றும் ஓவியக் கண்காட்சியகம் இது. பின்லாந்தின் புகழ்பெற்ற ஓவியர்கள், சிற்பிகளின் ஆக்கங்களுடன் உலகப்புகழ் பெற்ற பல ஓவியர்களின் படைப்புக்களும் இங்கு பார்வைக்குக் கிடைக்கின்றன. அக்ஸெலி மியூசியத்திலிருந்த உதவியாளர் சொன்னது போல் அக்ஸெலி காலன் கலேலாவின் புகழ் பெற்ற கலேவலா ஓவியங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.

கீழ்க்காணும் ஓவியம், கலேவலாவின் கதைநாயகன் வைனாமொயினனுக்கும் ஐனோ எனும் பெண்ணிற்கும் நடைபெற்ற உரையாடலைச் சித்தரிப்பது. தன்னை மணந்துகொள்ளும் படி கேட்ட வைனாமொயினனை மறுத்து, அவனை மணப்பதைவிட மரணம் மேல் என்று கருதி நீரில் மூழ்கி விடுகிறாள்.



கீழேயுள்ள இவ்வோவியம் மரண வாசலில் இருக்கும் லெம்மின்கைனன் என்பவனின் தாயார் அவனை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருப்பதைச் சித்தரிக்கிறது.


இது போருக்குப் புறப்படும் குல்லர்வோ


இன்னும் இதுபோலப் பல ஓவியங்கள், சிற்பங்கள் என அழகாக விரிந்தது அட்டெனியம்.

எங்கள் பயணத்தின் இறுதியாக ,இன்னும் ஒரு தேவாலயத்திற்குச் செல்லப் புறப்பட்டோம். இது மிகவும் வித்தியாசமான ஒரு தேவாலயம். டெம்பலியௌகியோ தேவலாயம் (Temppeliaukio) என்றிதற்குப் பெயர். குகைக்குள் அமைக்கப்பட்ட ஒரு ஆலயம் போன்ற ஒரு தோற்றம்.



கற்களால் செய்த தேவாலயம் என்றும் இதற்குப்பெயர். சுவர் முழுவதும் கற்கலால் ஆனது. தாமிரத்தாலான இதன் கூரை அரைக்கோள வடிவமுடையது. தேவாலயத்திற்குள் நுழைந்தால் அதன் வித்தியாசமான கற்சுவர்களும் தாமிரக்கூரையும் வியப்பளித்தன. இசைக்கருவியான ஆர்கன் (Organ) மிகப்பிரம்மாண்டமான தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது.


படம்: தேவாலயத்தின் தாமிரக்கூரை

நிறைய இறை-இசை நிகழ்ச்சிகள் இங்கே நிகழ்வதுண்டாம். நாஙள் அங்கே சென்ற வேளையிலும் ஒரு சீருடை இசைக்குழு பக்திப்பாடல்களை இசைத்துக்கொண்டிருந்தது.

இத்துடன் எங்கள் பின்லாந்துப் பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையம் திரும்பினோம். ஒன்றரை மணி நேரப் பயணம் முடித்து கோபன்ஹேகன் இறங்குகையில் குளிர்ந்த காற்று எங்களை வரவேற்றது.

0 Comments:

Post a Comment

<< Home