October 22, 2004

ப்ரஸ்ஸல்ஸ் - சிறுவனின் சிறுநீர்

பெல்ஜியத்தின் தலைநகரம் ப்ரஸ்ஸல்ஸ் (Brussles). ஐரோப்பியக் கூட்டமைப்பின்(European Union) தலைநகரமும் இதுதான். இந்த நகரத்தில் உள்ள சின்னஞ்சிறு சிலையே "மான்னிகென் பிஸ்"( Manneken Piss) , ஆனால் சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் வசீகரிக்கும் சிலை. ஒரு சிறுவன் சிறுநீர் கழிப்பது போல் அமைந்த சிறிய வெண்கலச் சிலை. அச்சிறுவன் மேடையிலிருந்து கீழிருக்கும் கற்தொட்டியில் சிறுநீர் கழித்துக் கொண்டே இருக்கிறான்.



ப்ரஸ்ஸல்ஸ் நகரின் புகழ்பெற்ற அரண்மனைகள் சூழ்ந்துள்ள பகுதி The Grand Place . நடுவில் ஒரு பெரிய திறந்த வெளி , அதைச் சுற்றிலும் மூன்று புறமும் உயர்ந்த மாளிகைகள். அதனைக் கடந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மான்னிகென் பிஸ். "Manneken Piss " என்றால் சிறுவனின் சிறுநீர் என்று பொருள்.இந்தச் சிலை எதற்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றிப் பல கதைகள் கூறப்படுகின்றன.

பதினான்காம் நூற்றாண்டு முதல் இச்சிலை இதே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது என்று செய்திகள் தெரிவித்தாலும் பதினாறாம் நூற்றாண்டு முதலே இச்சிலை பற்றிய குறிப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
செல்வந்தர் ஒருவர் தனது மகனைக் காணாமல் தேடி அலைந்தாராம். அந்த ஐந்து வயதுச்சிறுவன் தொலைந்த ஐந்து நாட்கள் கழித்து ஓரிடத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கையில் கண்டுபிடித்தாராம். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அந்த இடத்தில் சிலை அமைத்தார் என்பது ஒரு கதை.
எதிர்பாராத விதமாய் எப்படியோ அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தீப்பற்றிக் கொள்ள அவ்வழி சென்ற ஒரு சிறுவன் சிறுநீர் கழித்து அத்தீயை அணைத்தானாம். தீயை எரிய விட்டிருந்தால் தீ பரவி நகர் முழுதும் சாம்பல் ஆகியிருக்குமாம். தீ விபத்திலிருந்து நகரைக் காப்பாற்றிய அச்சிறுவன் நினைவாய் அச்சிலை அமைக்கப்பட்டது என்பது மற்றொரு கதை. பெரும்பாலானவர்கள் நம்பும் கதையும் இதுதான்.
தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஏழைச் சிறுவன் ஒருவன் , உணவு கேட்க எண்ணி ஒரு மந்திரவாதிக்கிழவனின் வீட்டுக்கதவைத் தட்டினான். கோபங்கொண்டு வெளியே வந்த கிழவன் , எல்லா நேரமும் சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்க அச்சிறுவனைச் சபித்தானாம். அதன் காரணமாய் அமைந்த நிகழ்வென்பது இன்னுமொரு கதை.



பதினாறாம் நூற்றாண்டில் ஜெரோமி துகொஸ்னொய் (Jérôme Duquesnoy) எனும் சிற்பி வடித்த இச்சிலை வெகு நாட்களுக்குப் பாதுகாப்பாய் இருந்தது. கி.பி 1695-ல் பிரெஞ்சுக் காரர்கள் தாக்கிய போது இச்சிலையை பொதுமக்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தனராம். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களால் எடுத்துச் செல்லப்பட்டுப் பின் மீட்கப்பட்டது. அதன் பின்னர் மறுபடியும் பிரஞ்சுக்காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். சிலையும் உடைந்து போய் விடவே நிஜ சிலையைப் போல் மாதிரி சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு இன்று வரை அது பாதுகாப்பாய்ப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுருட்டை முடியுடன் அரையடி உயரத்தில் இந்த ஐந்து வயதுச் சிறுவன் எந்நேரமும் ஒரு சிறு புன்னகையுடன் சிறுநீர் இருந்து கொண்டே இருக்கிறான். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவனைக் கண்டு மகிழ்கிறார்கள்.

இந்தச் சிறுவனின் உடைகள் சுமார் அறுநூறு தேறும். விதவிதமான உடைகள் தினசரி அணிந்து மக்களுக்குக் காட்சி தருகிறான். பண்டிகைக் காலங்களில் அதற்கேற்றாற்போல் உடையணிந்து கொள்கிறான். கிறிஸ்துமஸ் தாத்தா போல் , போர் வீரன் போல், எல்விஸ் போல், மொஸார்ட் போல் வெவ்வேறு வகையான உடையலங்காரங்கள். சில நாட்களில் பிறந்த மேனிதான். இவ்வனைத்து உடைகளையும் பார்க்க சிறப்பு மியூஸியமும் உண்டு. கி.பி 1747-ல் பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயி பரிசளித்த உடைதான் மிகப் பழமையானது.


இன்னொரு தகவல்: இச்சிறுவனின் பிரபலம் கண்டு பொறுக்காத ஒரு ஆசாமி Jeanneke Pis என்ற பெயரில் ஒரு சிறுமியின் சிலையை 1980-ல் அமைத்தாராம். ஆனால் அது இந்த அளவுக்குப் பிரபலம் அடையவில்லை.


October 18, 2004

லக்ஸம்பர்க் - 3



பியான்டன்(Vianden) செல்லும் சாலையும் வளைவுகள் நிரம்பியதாய் இருந்தது. அன்று மதியம் வரை இருந்த மந்த வானிலை மாறி வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததில் குளிர் விட்டு விலகியோடியது. எட்டில்ப்ருக்கிலிருந்து சுமார் ஒரு மணி நேரப்பயணத்தில் பியான்டன் அடைந்தோம். எங்கிருந்து பார்த்தாலும் மலைக்குன்றின் உச்சியில் இருந்த கம்பீரமான மலைக்கோட்டை மனதை மயக்கியது. அவர் (Our) நதிக்கரையிலமைந்த ( நதியின் பெயரே Our தான்) அழகிய கிராமம். நதியினை ஒட்டி வளர்ந்த சிறிய குன்று. உயரம் குறைவெனினும் நீளமான குன்று. குன்றின் மேலும் கீழும் வீடுகள். குன்றின் உச்சியை அடைய அமைந்த வளைந்த சரிந்த பாதைகள் . ஓரிடத்தில் மிதவைப்பயணம் இருந்தது. குன்றின் உச்சியை அடைய ஐந்து நிமிடங்கள் ந்டுத்துக்கொள்ளும் கேபிள் மிதவை. மேலே எழும்புகையில் பியான்டன் நகரின் இயற்கை தெளிவாய் விரிகிறது.



உச்சியை அடைந்ததும் கோட்டை சற்றே அருகில் தென்பட்டது. கேபிள் பயணம் நிறைவுறும் உச்சியிலிருந்து கோட்டைக்கு நடந்து செல்ல ஒரு ஒற்றையடிப்பாதை. பாதையின் இருபுறங்களிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள், உடைந்த கிளைகள், சிதறிய சருகுகள். அது சமதளமாய் அமைந்த பாதையல்ல, சரிவாய் அமைந்த பாதை . கோட்டை, மலையுச்சியிலிருந்து சற்று உயரம் குறைந்த இடத்தில் அமைந்திருப்பதால் சற்றே கீழிறங்கிச் சென்ற அப்பாதையில் இருபது நிமிட நடைக்குப்பின் கோட்டை வாசலை அடைந்தோம்.



பலமுறை புதுப்பிக்கப் பட்ட கோட்டை இது. பதினொன்றாம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப் பட்டதாம். பதினான்காம் நூற்றாண்டில் வேலைகள் நிறைவடைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் சிதைவடைந்த இக்கோட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது, இன்றும். ரோமானிய முறைப்படி கட்டப்பட்ட இப்பெரிய கோட்டையில் இருபத்தி இரண்டு அறைகள்,கோட்டையின் மொத்த நீளம் 90 மீட்டர். எண்கோண வடிவில் அமைந்த ஒரு அறை வித்தியாசமானது. தொழுகை நடத்துமிடமும் (Chapel)அதையொட்டி அமைந்த பிரசங்க அறையும் (Oratory) இந்த எண்கோண அறையில் உண்டு.சுற்றிலும் ஆறு வாசல்கள் .உயரமான ஆர வளைவுத் தூண்கள் கம்பீரமாய் நின்றன. அதைத் தொடர்ந்த பெரிய அறை போர்வீரர்களின் அறையாம் (Knight's Room). நிறைய ஓவியங்களும், சிலைகளும் இருந்தன. அந்நாளில் போர்வீரர்கள் அணிந்த கவச உடைகள் வைக்கப்பட்டிருந்தன. நுண்ணிய இரும்பு வளையங்களான கவச உடை பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாம். இது தவிர மற்ற போராயுதங்களும் காணக் கிடைத்தன.வழக்கமாக எல்லா அரண்மனைகளிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் இங்கும் இருந்தன. மன்னர்கள் பயன்படுத்திய கட்டில்கள், மேசை, நாற்காலிகள் , வாட்கள் முதலியன அவற்றுள் சில. அந்தக்காலத்து சமயலறையும் பழமை கெடாமல் அப்படியே இருக்கிறது. சமையல் செய்யும் ஏவலாளிகள் போல் மெழுகு பொம்மைகள் வைத்து அடுப்பில் சமைப்பது, கறி வெட்டுவது போன்ற நிகழ்ச்சிகளை கண்முன் நிறுத்துகிறார்கள்.

அரண்மனையின் வெளியிலிருந்து எந்தப்பக்கம் திரும்பினாலும் பசுமை கொஞ்சும் மலைப்பகுதி, மலையில் சரிவாய் அமைந்த வீடுகள், சரிவாய் ஓடும் சாலைகள், மலையின் கீழ் தவழ்ந்து செல்லும் ஆறு என மனம் மயக்கும் காட்சிகள்.



திரும்ப மனமின்றித் திரும்பினோம். கீழிறங்கிச் செல்ல மற்றொரு சாலையைத் தேர்ந்து சாலைவழி நடந்தோம். சரிவாய் அமைந்த பாதைகளில் மலைவழி பைக் ஓட்டும் பொழுதுபோக்கு (Mountain Biking) சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது.

மறுநாள் நாங்கள் சென்றது பௌபோர்ட் (Beaufort) எனப்படும் சிற்றூர். இந்தப்பகுதி முல்லர்தால் (Mullerthal) எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் நிலவமைப்பு சுவிட்சர்லாந்து நாட்டின் அமைப்பை ஒத்திருப்பதால் குட்டி சுவிஸ் (Little Switzerland) எனும் பட்டப் பெயருமுண்டு. லக்ஸம்பர்க் நகரிலிருந்து மீண்டும் ஒரு பேருந்துப்பயணம். வழக்கம் போல் மேடு பள்ளமான பசுமைப் பகுதி. வழியெங்கும் நிறைய கோல்ப் மைதானங்கள். சில இடங்கள் மரங்கள் அடர்ந்த மலைப்பகுதி. சலசலத்து ஓடும் சிற்றோடைகள் .



சரிவாய் அமைந்த மலைப்பகுதியேலேயே இங்கும் வீடுகள். விதவிதமான பாறைகளின் அமைப்பு. மீண்டும் ஒரு பழமையான கோட்டை. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டபட்ட இக்கோட்டை மட்டும் தற்போது எஞ்சியிருகிறது. முற்றிலும் கற்கலால் ஆன கோட்டை இது. பாதாள சித்திரவதை அறைகள் பயமுறுத்தின. சிறு சிறு அறைகள், மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி வேறெதுவும் இல்லை. கற்சுவரில் ஓடிய சுவர்ப்பல்லியைப் பார்த்து அதிசயித்துக் குதூகலித்த ஒரு சுற்றுலாச் சிறுவனும் அவனது தந்தையும் கண்டு நாங்கள் சிரித்தோம்.

கோட்டையின் மீது ஏறி உச்சியில் நின்று சுற்றிப்பார்க்கையில் தெரிந்த அடர்ந்த காடு எங்களை அழைத்தது. ஆனால் திரும்பிச் செல்லும் விமானப் பயணம் நினைவுக்கு வர காட்டிற்கு விடை கொடுத்து கண்ணுக்கினிய காட்சிகளை எடுத்துக் கொண்டு விமான நிலையம் அடைந்து மியூனிக் செல்லும் குட்டி விமானத்திலேறி ஊர் திரும்பினோம்.

October 02, 2004

லக்ஸம்பர்க் - 2



லக்ஸம்பர்க்-கின் தொட்டில் எனப்படும் இப்பள்ளத்தாக்குப் பகுதியில் இரண்டு பெரிய பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட்டன. போக் எனப்படும் அரண் (Bock casemates) ஒன்று, பெட்ருஸ்ஸெ பள்ளத்தாக்கில் அமைந்த மற்றொன்று. போக் அரண், பள்ளத்தாக்கின் குறுக்காகக் கட்டப்பட்ட, கற்பதுங்கறைகள் நிறைந்த ஒரு அமைப்பு.



வரைபடத்தில் காண்பது அதன் பக்கவாட்டு அமைப்பும் , அதன் குறுக்கு வெட்டு அமைப்பும் . முற்றிலும் கல்லால் ஆன இந்த அரணுள் ஏராளமான அறைகள். கற்கள் வளைவு வளைவாய் அமைய வெளிப்புறம் திறந்த துளைகள். ஒவ்வொரு துளைக்கருகிலும் ஒரு பீரங்கி மேடையும் அதன் மேல் ஒரு பீரங்கியும் வைக்கப்பட்டிருந்தது.



சுமார் ஐம்பது பீரங்கிகள் வைக்க மேடைகள் அமைக்கப்பட்டிருந்தனவாம். அதனைக்கடந்து கற்படிகளில் கீழிறங்கிச் செல்லவே வெளிச்சம் வரும் ஒரு இடம் தெரிந்தது. பால்கனி போல் அமைந்த அவ்விடம் சென்று வெளியே நோக்கினால் பள்ளத்தாக்கின் மொத்த அமைப்பும் அழகாகக் கண்களுக்குள் விரிகின்றன.

கைதிகளை அடைத்து வைக்கும் சிறையறைகளும் உண்டு உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் ஒரு பெரிய அறையில் தொல்பொருட்கள் , புகைப்படங்கள் மற்றும் அவற்றின் குறிப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது எவ்வாறு இந்தப்பள்ளத்தாக்கு ஏராளமான மக்களுக்கு பதுங்குமிடமாகப் பயன்பட்டது என அறியத்தரும் குறிப்புகள் உள்ளன. போர் விமானங்கள் வீசும் குண்டு வீச்சிலிருந்து சுமார் முப்பத்தைந்தாயிரம் மக்கள் இந்த அரண்களில் மறைந்து தப்பித்தனராம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏராளமான போர் வீரர்களுக்கும் குதிரை முதலான விலங்குகளுக்கும் பாதுகாப்பான மறைவிடம் இதுதான். ஆயுதம் செய்யும் தொழிற்சாலைகளும் சமையலறைகளும் இருந்தனவாம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னரின் படைத்தளபதியாயிருந்தவரின் அறைகள், படுக்கையறை, படிப்பறை இந்த அரணுள் உள்ளது. அவர் தமது எண்பத்தியிரண்டாம் வயதில்கூட இங்குதான் இருந்தாராம்.
1994ஆம் வருடம் யுனெஸ்கோ (UNESCO) - வின் உலக கலாச்சாரச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது இப்பாதுகாப்பு அரண்.


மறுநாள் எஷ் சுர் ஸ்யூர் ( Esch Sur Sure) எனும் இடத்திற்குக் கிளம்பினோம்.லக்ஸம்பர்க் சுற்றுலாத்தகவல் மையத்தில் விசாரித்ததில் இவ்விடத்தில் பெரிய அழகான ஏரி ஒன்று உள்ளதென்று அறிந்தோம். லக்ஸம்பர்க் நகரிலிருந்து எட்டெல்ப்ருக் (Ettelbruck)) எனும் குறுநகர் வரை இரயிலில் சென்று அங்கிருந்து இவ்வேரிக்குப் பேருந்தில் பயணிக்க வேண்டுமென்று சொன்னார்கள். எட்டெல்ப்ருக் சென்றபிறகே , அன்றைய தினம் பேருந்துகள் ஏரிக்குச் செல்லாத விடுமுறை நாள் எனத் தெரிந்தது. ஒரு வாடகை டாக்ஸியில் ( ஆங்கிலம் தெரியாத பெண் ஓட்டுனர்) பயணித்தோம். வழியெங்கும் இயற்கை கொஞ்சும் பசும்புல் வெளிகள், ஏறி இறங்கும் நிலப்பகுதி, வளைந்து நெளிந்த பாதை என்று சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.



சுமார் முக்கால் மணி நேரப்பயணத்தில் ஏரியை அடைந்தோம். அங்கு இன்னொரு ஏமாற்றமும் இருந்தது. ஏரியில் படகு சவாரிக்கும் அன்றைய தினம் விடுமுறை ( ஈஸ்டர் தினம்). இருப்பினும் ஏரியை ஒட்டிய மலைப்பாதைகள், ஏரியின் குறுக்கே ஓடிய பாலங்கள், அதை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்த மரங்களடர்ந்த காடு , புல் வெளிகள் என்று இயற்கை அழகிற்குக் குறைவில்லை. இந்த ஏரி லக்ஸம்பர்க் நகருக்கு நீர் வழங்கும் ஏரியாகும்.



மரங்களடர்ந்த வனப்பகுதியில் நடந்து சுற்றுகையில் எனது செல்பேசியைத் தவறவிட்டது தெரியவந்தது.ஒரு வேளை நாங்கள் வந்த டாக்சியில் தான் தவறியிருக்கும் என யூகித்து மீண்டும் அதே டாக்சி நிறுவனத்திற்கு ( எனது மனைவியின் செல்பேசி கொண்டு) அழைத்து விசாரித்ததில் செல்பேசி அங்குதான் இருந்தது. திரும்பிச் செல்ல மீண்டும் டாக்சியை வாடகைக்கு அழைத்து செல்பேசியையும் திரும்பப் பெற்றோம்.

எட்டெல்ப்ருக்கிலிருந்து பியாண்டன் (Vianden) எனும் சிறு நகருக்கு அடுத்த பயணம். V- ஐ இங்கு "FO" என்றுதான் உச்சரிக்கிறார்கள்( ஜெர்மனியிலும்தான்). பேருந்து வசதி இருந்தது. பியாண்டன் ஜெர்மனியின் எல்லைக்கருகில் அமைந்த ஒரு அழகிய சிற்றூர். மலை மேல் அமைந்த ஒரு மலைக்கோட்டை இதன் முக்கிய சுற்றுலாத்தலம். அது பற்றி அடுத்த பதிவில்.