August 28, 2004

பெர்லின் சுவர் -2

இரண்டு பகுதிகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த இன்னலுற்றனர். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க இயலாது அவதியுற்றனர். பலர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்ல முயன்றனர். தப்பிச் செல்ல இயலா வண்ணம் காவல் பலமாயிருந்தது. இருப்பினும் இம்முயற்சியில் பலர் வெற்றி பெற்றனர். இவ்வாறு தப்ப முயற்சிப்பவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றே காவல் துறைக்கு ஆணையிடப்பட்டிருந்ததாம் . ஆயினும் இறுதி நடவடிக்கையாக , தப்ப முயற்சிப்பவர்கள் எச்சரிக்கையை மீறினால் சுடலாம் என்று எல்லைப்படைக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. எச்சரிக்கையை மீறி எல்லை கடப்பவர்களை திரும்பச் சொல்லி வானை நோக்கி ஒருமுறை சுடுவார்களாம். அதனையும் மீறிச் சென்ற நூற்றுக் கணக்கான மக்கள் சுடப்பட்டு இறந்தனர். எவ்வளவு பேர் இறந்தனர் என்ற உண்மையான விவரம் அரசால் மறைக்கப்பட்டது.

படம்: ப்ரான்டன்பர்க் நுழைவாயிலும் அதைச் சுற்றியிருந்த பெர்லின் சுவரும் (1969-ல்)




சுவர் கட்டிய முதலாம் ஆண்டு நிறைவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சி நடைபெற்றது. பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் கிழக்கு ஜெர்மனிக்கு மேற்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சட்டங்கள் சற்றே தளர்த்தப்பட்டு உறவினர் திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளின் போது அனுமதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே வருபவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விஸா இருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
பெர்லினின் மேற்குப்பகுதியிலிருந்து கிழக்கே நுழைய நுழைவுச் சாவடிகள் உண்டு. அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதிலிருந்து கிழக்கு பெர்லின் நுழைய அமைந்த ஒரு சாவடி ப்ரைடுரிஹ்ஸ்ட்ராசே (Friedrichstrasse) எனும் இடத்தில் அமைந்திருந்தது. செக்பாயிண்ட் சார்லி (Check point Charlie) எனப்பெயரிடப்பட்ட இச்சாவடியில் இருந்து கிழக்கு பெர்லின் நுழைவதற்கு ஏராளமானோர் தினந்தோறும் வரிசையில் நிற்பது பல வருடங்களுக்கு வழக்கமாயிருந்தது. "அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து நீங்கள் வெளியேறுகிறீர்கள்" என அறிவுறுத்தும் பலகை (ஆங்கில, ஜெர்மன்,ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழிகளில்) அங்கு வைக்கப்பட்டு இருந்தது.



செக்பாயிண்ட் சார்லி தற்போது சுவர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பெர்லின் சுவரின் பல்வேறு நிகழ்வுகளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது. அது குறித்து பின்னர் காண்போம்.

இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த போராட்டம் நாளாக நாளாக வலுத்ததேயன்றி குறையவில்லை. . கிழக்கு ஜெர்மனியிலும் கம்யூனிஸ அரசாங்கத்திற்குப் பல்வேறு நெருக்கடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. 1987-ல் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ரொல்னால்ட் ரீகன் ஜெர்மனிக்கு விஜயம் செய்தார். பெர்லின் நகரின் புகழ் பெற்ற பிரான்டன்பர்க் வாயில் முன் நிகழ்த்திய உரையில் சுவரைத் தரைமட்டமாக்குங்கள் என்று ரஷ்ய அதிபர் கார்பஷேவிடம் கேட்டுக்கொண்டார்.
ரஷ்ய அதிபரும் தனது திட்டமான பெர்ஸ்த்ரோய்கா - வை (Perestroika)அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி சோவியத் யூனியனின் பிடியில் இருந்த பல நாடுகளுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் மாற்றம் ஏற்படும்படி சுதந்திர உரிமை வழங்கப்படும் என்று அறிவித்தார்.எண்பதுகளின் இறுதியில் ஐரோப்பாவில் கம்யூனிஸ ஆதிக்கம் வீழ்வுற்று ஜனநாயகப்பாதையில் சில நாடுகள் அடியெடுத்தன. கிழக்கு ஜெர்மனியிலும் போராட்டங்கள் தொடர்ந்தன. 1989-ல் ஹங்கேரி தனது எல்லைகளை கிழக்கு ஜெர்மனியிலிருந்து வரும் அகதிகளுக்குத் திறந்துவிட்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. இறுதியாக வேறு வழியின்றி 1989 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் நாள் , கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனி செல்ல இனி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று அரசு அறிவித்தது. மறுநாள் முதல் சுவரின் கதவுகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு அதுவரை காத்திருக்கப் பொறுமை இல்லை. அன்றிரவே ஆயிரக்கணக்கான மக்கள் சுவரின் இருமருங்கும் கூடினர். கிழக்கு ஜெர்மன் காவலாளிகளுக்கு வாசலைத் திறந்து விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சந்தோஷ ஆர்ப்பரிப்பில் மக்கள் மேலும் திரண்டனர். சுவர்கள் மீது ஏறினர். சுவரை உடைத்தனர். சுவர் இருந்த சுவடு சில நாட்களில் மறைந்தது. இரு நாடுகளும் இணைந்தன. உலகம் வாழ்த்தியது.

August 22, 2004

பெர்லின் சுவர் -1

நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது (1989) பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் வண்ண வண்ணப் படங்கள் வெளிவந்தன. சுவரின் அருகே நிற்கும் காவலாளி ஒருவருக்கு பெண் ஒருவர் பூச்செண்டு கொடுப்பது போல் ஒரு படமும் சுவரின் மீது ஏறி சிலர் இடித்துக் கொண்டிருந்த ஒரு படமும் இன்னமும் என் நினைவில் நிற்கிறது.அப்போதைக்கு இரண்டு ஜெர்மனிகளும் இணைகின்றன;இரு நாடுகளையும் பிரித்து வைத்த சுவர் உடைக்கப்பட்டது என்ற அளவிலேயே என் புரிந்துகொள்ளுதல் இருந்தது.
பெர்லின் சுவர் இருந்த இடங்களை நாமும் பார்த்துவிடுவோம் என்று கனவில் கூட நான் எண்ணியதில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஜெர்மனி வாசம் முடிந்து ஸ்வீடனுக்கு குடியேற ( குடியேற்ற உரிமை பெற) பெர்லினில் இருந்த ஸ்வீடன் தூதரகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த வேலை முடிந்ததும் மூன்று நாட்கள் பெர்லினையும் சுற்றிவரத்( நானும் எனது மனைவியும்) தீர்மானித்தோம்.

பெர்லின் சுவர் இருந்த சுவடு தெரியாமல் முற்றிலும் மறைந்து விட்டாலும் சுவரின் மிச்சங்கள் இன்றும் ஓரிரு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவும் நினைவுச் சின்னமாகவும் பாதுகாக்கப் பட்டுள்ளன. இது பற்றிய ஒரு மியூசியமும் உண்டு.
இவற்றையெல்லாம் காணும் முன் வரலாற்றைச் சற்றே புரட்டிப்பார்த்துவிட்டு வரலாம், வாருங்கள்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் அழிவுக்குப்பின் ஜெர்மனியில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. கிழக்கு ஜெர்மனி , மேற்கு ஜெர்மனி என்று இரு புதிய நாடுகள் உதயமாயின. அன்றிலிருந்து பெர்லின் நகரம் பிரச்சனைக்குரிய பகுதியானது. அன்றைய பெர்லின் நகரம் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அதன் நிர்வாகம் நேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டிஷ், ப்ரான்ஸ் மற்றும் ரஷ்யாவிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரஷ்யா வசம் இருந்த கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகராகவும் ஆனது. ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்ததால் இங்கு கம்யூனிஸம்தான். முதலில் இரு நாடுகளுக்குமிடையே எல்லை கடந்து செல்வது பிரச்சினையாக இல்லை. நாளடைவில் "மேற்கு பெர்லினில் இருக்கும் நேச நாடுகள் விலகிக் கொண்டு மேற்கு பெர்லினை சுதந்திரப்பகுதியாக்க வேண்டும்" என்ற கிழக்கு ஜெர்மனியின் வாதம் கேட்க ஆரம்பித்தது. அமெரிக்க , பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் இதற்கு உடன்படவில்லை. மேற்கு பெர்லினின் சுதந்திரத்தைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்து இருப்பதாகக் கூறிவிட்டார்கள்.

படம்: பெர்லின் நகர் - 1961 ஆம் வருடத்தில், நான்கு கட்டுப்பாட்டுப்பகுதிகளுடன். மஞ்சள் வண்ணப் பட்டை - பெர்லின் சுவர் கட்டப்பட்ட பகுதி.



இதனால் வெறுப்பைடந்த கிழக்கு ஜெர்மனி அரசு , மேற்கு ஜெர்மனியிலிருந்து எல்லை கடந்து வருவதற்குப் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது.இரு பகுதிகளையும் இணைக்கும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அப்போதைய ரஷ்ய அதிபராயிருந்த க்ருஷேவ் , மேற்கு பெர்லினில் இருந்து நேச நாட்டுப்படைகள் , ஒரு குறித்த நாளுக்குள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தார். இதற்கு நேச நாடுகள் மறுத்துவிட்ட நிலையில் இரு பகுதிகளுக்குள்ள ராஜ்ஜிய உறவு மேலும் சீர்கெட்டது. அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் க்ருஷேவிற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் பயனின்றிப்போய் விட்டன.
கிழக்கு ஜெர்மனி அரசு அதன் பின்னர் எல்லை கடந்து செல்வதற்கு தடை விதித்தது. தடை விதிக்கப்பட்ட அத்தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வெளியேறி மேற்கு ஜெர்மனியில் அடைக்கலமாயினராம். இதைத் தடுக்க இரு நாடுகளையும் பிரிக்கும் சுவர் ஒன்றைக் கட்ட எண்ணிய கம்யூனிஸ அரசு திட்டமிட்டது . 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள், இரவு இரண்டு மணிக்கு காவல்படை இரு பகுதிகளையும் பிரிக்கும் இடத்தில் அணிவகுத்தது. வேலிகள் இடப்பட்டன. இரு பகுதிகளுக்கும் பேருந்துப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அன்று காலையில் இதைக்கண்ட கிழக்கு பெர்லின் மக்கள் ஆத்திரமடைந்தனர். அரசை எதிர்த்துப் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. காவலர்கள் அறியா வண்ணம் மேற்கு பெர்லினுக்குப் பலர் தப்பித்துச் சென்றனர்.

வேலிக்கு அருகே அதனைத் தொடர்ந்து அகழிகள் தோண்டப்பட்டன. சுவர் நெடுநெடுவெனக் கட்டப்பட்டு வளர்ந்தது. எல்லை நெடுகிலும் கண்காணிப்புக்கோட்டைகள் கட்டப்பட்டன.அரசிடமிருந்து அனுமதி ( விசா) பெறாமல் எல்லை கடப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது.



சுமார் நூற்றி ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் நீளமுள்ளது இச்சுவர். சுவரின் தடிமன் முப்பது சென்டிமீட்டர். பதிமூன்றே நாட்களில் இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கிழக்கு பெர்லின் மேற்குப் பகுதியிலிருந்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டது.

August 18, 2004

வாஸா - 3



வாஸா அருங்காட்சியகத்தில் நுழைந்ததும் மெல்லிய வெளிச்சம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. மெல்லிய வெளிச்சத்தைத் தொடர்ந்து செல்ல, பிரம்மாண்டமான கப்பல் எதிர்ப்பட்டது. கப்பலின் முகப்புப் பகுதியை அண்ணாந்து பார்த்ததில் கழுத்து வலித்தது. கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல்தளம் வரை , கப்பலின் ஒவ்வொரு பகுதியாய்ச் சென்று பார்ப்பதற்கு ஏழு தளங்கள். கப்பலின் முன்பகுதியில் மூக்கு போல் நீட்டிக்கொண்டிருந்த அலகு (Beak) அதில் ரோம் மன்னன் நீரோவின் உருவம் பொறித்த சிலை. தண்ணீரில் மூழ்கி இற்றுப் போயிருந்த அச்சிலையை மீண்டும் புதுப்பித்திருந்தார்கள். மன்னர் குஸ்தவ் இள வயதில் முடி சூட்டிக்கொள்வது போல் ஒரு சிலை. மரத்தில் இழைத்துச் செய்யப்பட்டிருந்த அனைத்து சிலைகளும் அதிசயமாய் இருந்தன. கப்பலின் மேலிரு தளங்களில் அமைக்கப்பட்டிருந்த பீரங்கி மேடைகளும் சுற்றிலும் அமைக்கப்பட்ட அறுபத்தி நான்கு துளைகளும் இருந்தன. கப்பல் மூழ்குவதற்கு இந்த ஈரடுக்கு பீரங்கித் துளைகளும் ஒரு காரணம்.






மியூசியத்தின் உள்ளே ஒரு திரையரங்கு. மணிக்கொருதரம் காட்டப்படும் குறும்படத்தில் வாஸாவை மீட்கப்பட்ட காட்சி முதல் அதைச் செப்பனிட்டு எவ்வாறு தற்போதுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டது என விரியும் காட்சி வரை விளக்கமாய்க் காணலாம். படம் ஸ்வீடிஷ் மொழியில் தான் , நல்லவேளையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு திரைமேல் சிவப்பு எழுத்துக்களில் ஓடுகிறது. மூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் காட்சிகளும் , கப்பல் மூழ்கிய இடத்தைச் சுற்றிலும் இறைந்து கிடந்த மரப் பலகைகளும் ஆணிகளும் பிற பொருட்களும் மீட்கப்பட்டு , எவ்வாறு அதே ஆணிகளைக் கொண்டு அப்பலகைகள் மீண்டும் பொருத்தப்பட்டன என்பதௌ விளக்கும் காட்சிகளும், கப்பல் மீண்டவுடன் அதனுள் குவிந்து கிடந்த சகதியை வெளியேற்றி , கப்பல் சுத்தப்படுத்தப்பட்டு , வேதிப்பொருட்கள் கொண்டு கப்பல் புதுப்பிக்கப்பட்ட காட்சிகளும் சுவையாய் இருந்தன.

நிஜக் கப்பலின் அருகே அதன் மாதிரி வடிவமொன்று சிறியதாய் வைக்கப்பட்டிருந்தது. கடலினடியில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு வகையான பொருட்களும் பார்வைக்குக்கிடைத்தன. கப்பலில் சென்ற போர் வீரர்கள் பயன்படுத்திய தோலாலான உடைகள் மற்றும் காலணிகள் , பீரங்கிகள் உபயோகப்படுத்திய பாத்திரங்கள் , போர்க்கருவிகள் என எண்ணிலடங்கா.

"கப்பல் ஏன் மூழ்கியது?" என்ற கேள்விக்கு மியூசியத்தின் ஒரு சிறிய அறையில் விடை கிடைக்கிறது. அசையாப் படங்களை (Slide Show) ஒரு திரையில் காண்பித்து , அப்படத்திற்கேற்ப பின்னணியில் விளக்க உரை , நல்ல வேளையாக ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது. அறையிலுள்ள ஒலிபெருக்கிகள் டிஜிடல் டால்பி முறையில் அமைக்கப்பட்டிருந்தன. கப்பல் மூழ்கியபோது ஏற்பட்ட விளைவினை நம் கண்முன் நிறுத்த , கப்பல் மூழ்குவது போன்ற ஒரு ஓவியமும் அதன் பின்னணியில் கப்பல் மூழ்கும்போது எழும் ஓசையை விட அதிக அதிர்வை ஏற்படுத்தும் இசையையும் தந்து பிரமிப்பு ஏற்படுத்தினார்கள். கப்பல் மூழ்கியபோது மன்னர் போலந்து நாட்டில் இருந்ததால் மந்திரி ஒருவர் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு இதற்கான காரணம் ஆராயப்பட்டதாம். இயற்கையின் விளையாட்டு என ஒரு சிலர் எண்ணினர். எவரோ செய்த சதி என்று சிலர் சந்தேகித்தனர். கப்பலிலிருந்து தப்பித்தவர்கள், கப்பல் கட்டிய தொழிலாளர்கள் , கப்பலைக் கட்டிய ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் என அனைவரும் விசாரிக்கப்பட்டனர். முடிவில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. யாரும் தண்டிக்கப்படவுமில்லை. பின் ஏன் கப்பல் மூழ்கியது? மன்னரின் விருப்பப்படி ஈரடுக்குப் பீரங்கித்துளைகள் கப்பலில் அமைக்கப்பட்டதால், அத்துளைகள் கப்பலின் கீழ்தளத்தில் சமநிலைப்படுத்தும் கற்கள் (Ballasts) நிரப்பும் இடத்தைப் பெரிதும் பாதித்தது. எனவே போதிய கற்கள் எடுத்துச் செல்லாமல் குறைவான கற்களே நிரப்பப் பட்டன. காற்று பலமாக வீசியதால் கப்பல் தனது எடையச் சமன் செய்து கொள்ள முடியாது கவிழ்ந்து விட்டது.

கப்பலின் அடிப்பகுதி முதல் மேல்பகுதி வரை ஒவ்வொரு தளமாய்ப் பார்த்து வியந்தோம். ஒவ்வொரு தளத்திலும் இது தவிர வேறு எதாவது காட்சியோ , குறிப்புகளோ அல்லது மீட்டெடுக்கபட்ட பொருட்களோ வைக்கப்பட்டு மேலும் சுவை சேர்த்தன. மூழ்கிய கப்பலை மேலே உயர்த்த கப்பலினடியில் துளைகள் இட்டு, வளையும் கம்பிகள் செலுத்தித் தூக்கியதைக் கண்முன் நிறுத்தும் ஒரு மாதிரியும் (Model) ஒரு தளத்தில் இருந்தது. கப்பலின் மீது செதுக்கிய சில சிலைகளையும் தனியாக ஒரு தளத்தில் காண முடிந்தது. சிற்பங்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.



மியூசியம் விட்டு வெளிவந்த பின்னும் வாஸாவின் பிரம்மாண்டம் கண்களுக்குள் புகுந்து தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்றும் !


August 11, 2004

வாஸா - 2

வாஸா மூழ்கியபின் அதனைத் தேடி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவுற்றன. அவ்வளவு எடையுள்ள கப்பலை மீட்பது சவாலான காரியந்தான். வாஸா மூழ்கி சுமார் முன்னூற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் இம்முயற்சி செயல் வடிவம் பெற்றது. ஆன்டர்ஸ் ப்ரென்ஸீன் (Anders Frenzen) என்பவர் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவராவார். வாஸா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தபின் அதை எவ்வாறு மீட்பது என்பது குறித்து, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வகையில் திட்டமிட்டார். கடலுள் ஆய்வு செய்யும் இருவர் துணையுடன் வாஸா மூழ்கியிருக்கும் நிலை பற்றி ஆய்வு செய்தார். நல்ல வேளையாக வாஸா தலைகீழாய்க் கவிழாமல் நேராகவே அமர்ந்திருந்தது.

எனவே கப்பலை அப்படியே தூக்குவது என முடிவானது. தூக்குவது என்ன பத்து கிலோவா? டன் கணக்கில் எடை. கப்பலைத் தூக்குகையில் முன்னூறு வருடங்களாய் கடல்நீரில் ஊறிய மரங்கள் உடையவும் வாய்ப்பிருந்தது. சற்றுக் கடினமான செயல்தான். செலவு அதிகம் வைக்கும் திட்டம் இது. அனைத்துச் செலவுகளையும் ஸ்வீடனின் கடற்படையும் ஒரு தனியார் நிறுவனமும் ஏற்றுக்கொண்டன. முதலில் கப்பல் அமர்ந்திருந்த கடல்தரையில் (கடல் மட்டத்திலிருந்து முப்பது மீட்டர் ஆழம்) ஆறு சிறிய சுரங்கங்கள் தோண்டப்பட்டன. அதாவது , தடிமனான வளையும் இரும்பு கம்பிகளை ஒருபுறம் செலுத்தி மறுபுறம் எடுத்து அப்படியே மேலே உயர்த்தும் திட்டத்துடன் இந்தத் துளைகள் இடப்பட்டன. தடிமனான இரும்புக்கம்பிகளை துளைகளில் செலுத்தி இயந்திரங்களின் உதவியுடன் சிறிது சிறிதாக கப்பல் மேலே உயர்த்தப்பட்டது. இந்தப்பணிகளெல்லாம் சுமார் ஐந்து வருடங்கள்( 1956 முதல் 1961 வரை) தொடர்ந்தன.
ஏப்ரல் 24, 1961. மூழ்கிய கப்பல் மீண்டும் மூச்சு வாங்க வெளியுலகம் வரும் நாள். இச்செய்தி உலகெங்கும் பரவிவிட செய்தியாளர்களும் பார்வையாளர்களும் ஸ்டாக்ஹோமை முற்றுகை இட ஆரம்பித்தனர். நாடெங்கும் இதே பேச்சு. ஸ்வீடனின் தொலைக்காட்சியும் இந்நிகழ்ச்சியை நேரடியாய் ஒளிபரப்பு செய்தது. சரியாய் காலை ஒன்பது மணிக்கு வாஸாவின் மேல்தளம் கண்ணுக்குப் புலப்பட ஆரவாரக்கூச்சல்களில் கடலே அதிர்ந்ததாம்.

படம்: 1961-ல் கப்பல் மீட்கப்பட்டு தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தபோது.



பின்னர் கப்பல் மூழ்கிய இடத்தைச்சுற்றிலும் சிதறிக்கிடந்த மரப்பலகைகள், ஆணிகள், இறந்தவர்களின் எலும்புகள் , சிதறிய ஆயுதங்கள் , உடைந்த சிற்பங்கள் முதலியன தேடி எடுக்கப்பட்டன.
கப்பலை மீட்டெடுத்த பின் அதைச் செப்பனிடும் வேலை ஆரம்பமானது. அவ்வேலை, கப்பலைத்தூக்கி எடுக்கும் வேலையை விடச் சிரமமானதாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் இருந்தது. இவ்வளவு ஆண்டுகள் கடல் நீரைக் குடித்த மரப்பலகைகள் , பல ஆண்டுகள் கெட்டுப்போகாதவாறு பதப்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. மரங்கள் கெடாதவாறு பாதுகாக்கும் பாலிஎதிலின் கிளைகால் எனும் வேதிப்பொருள் கப்பல் முழுதும் தடவப்பட்டது. மரங்கள் இற்றுப்போகா வண்ணம் இருக்க போரிக் அமிலம் கலந்த கலவையும் பூசப்பட்டதாம். உடைந்த சிற்பங்கள் மீண்டும் செப்பனிடப்பட்டு கப்பலில் பொருத்தப்பட்டன. தளர்ந்த ஆணிகள் முடுக்கப்பட்டன.செப்பனிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற தற்காலிகமாய் ஒரு இடத்தில் பார்வைக்கென வைக்கப்பட்டது. இப்பணிகள் எல்லாம் நிறைவடைந்தபோது 1990 ஆம் ஆண்டு பிறந்திருந்தது. பின்னர் ஸ்டாக்ஹோமின் யூர்காடன் (Djurgarten) எனும் தீவில் நிரந்தரமாய்க் குடியேறியது வாஸா.

இந்த வருடத்தின் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஸ்டாக்ஹோம் பயணித்தபோது வாஸா மியூசியத்தைப் பார்வையிடச் (நானும் எனது மனைவியும்) சென்றோம். ஸ்டாக்ஹோம் சென்றுவரத் திட்டமிட்டால், பயணத்தின் முதல் அதிகாரம் வாஸா கப்பல் தான்.
மியூசியத்தில் கண்டவை பற்றி அடுத்த பதிவில்..

August 06, 2004

வாஸா - 1

வாஸா - முதல் பயணத்திலேயே மூழ்கிப்போன கப்பல். முன்னூறு வருடம் மூச்சடக்கிய பின் முழுதாய் மீட்கப்பட்ட கப்பல். ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கடலோரக் குடிலில் கம்பீரமாய்க் குடியிருக்கும் கப்பல்.




இந்தக் கப்பல் பிறந்த கதை, கடலில் மூழ்கிய கதை, மீட்கப்பட்ட கதை , தற்போதைய மியூசிய வாழ்க்கைக் கதை - எல்லாக் கதைகளையும் விரிவாய்க் கூறுகிறேன்.

தோன்றிய கதை

கி பி 1624. ஸ்வீடனின் மன்னராக ஆட்சி செய்து கொண்டிருந்தவர் குஸ்தவ் II அடோல்ப் (Gustav II Adolf) என்பவர். தனது பதினேழு வயதிலேயே மன்னரானவராம். பின்லாந்தும் ஸ்வீடனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மன்னர், நாடு என்றாலே போர்கள் தானே வரலாறு? குஸ்தவ் II-ம் அதற்கு விதிவிலக்கல்ல. அண்டை நாடான டென்மார்க், ரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் போர்களில் ஈடுபட்டார். இத்தனைக்கும் போலந்து நாட்டை ஆட்சி செய்தவர் இவரது உறவினரே. இருந்தாலும் மண்ணாசை யாரை விட்டது? அடிக்கடி போர்கள் புரிந்ததனால் படைகளும் கப்பல்களும் சேதமாயின. இருந்த கப்பல்களும் பழையதாய் இருந்தன. எனவே புதிதாகக் கப்பல் செய்ய மன்னர் உத்தரவிட்டார். ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் (Henrik Hybertsson) எனும் டச்சுக்காரர் கப்பல் கட்டுவதில் புகழ்பெற்றவராம். இரண்டு பெரிய கப்பல்கள் மற்றும் ஏராளமான சிறிய ரகக் கப்பல் கட்டும்படி தளபதியிடமிருந்து உத்தரவு வரவும் கப்பல்கள் கட்டும் பணியினைத் தொடங்கினார். இரவும் பகலும் வேலைகள் தொடர்ந்தன.

கப்பலகள் செய்வதற்கு ஸ்வீடனின் காடுகளிலிருந்து சுமார் ஆயிரம் ஓக் மரங்கள் வெட்டப்பட்டன. ஓக் மரங்கள் சற்று எடை அதிகமானவை, உறுதியானவை. இரண்டு பெரிய கப்பல்களுள் ஒன்றினுக்கு வாஸா என்றும் மற்றொன்றிற்கு மூன்று கிரீடங்கள் (Tre Kronar) என்றும் பெயர் சூட்டப்பட்டது. வாஸா என்பது மன்னரின் பரம்பரையைக் குறிப்பது ( Vasa Dynasty).
சுமார் நான்கு வருடங்களில் கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டன. வாஸா, ஸ்டாக்ஹோம் நகரக் கடற்கரையில் கம்பீரமாய் நின்றது. மரக்கப்பலில் வண்ணம் பூசப்பட்டது. கப்பலின் முகப்பில் மர வேலைப்பாடுகளாலான சிற்பங்கள் செதுக்கப்பட்டன.



இது ஒரு நான்கடுக்குக் கப்பல். கப்பலின் எடை ஆயிரத்து இருநூறு டன்கள், கப்பல் கடலின் காற்றில் கவிழ்ந்துவிடாமல் பாதுகாக்க (கப்பலைச் சமநிலைப்படுத்தும் எடைக் கற்கள் - Ballast) நூற்று இருபது டன் கற்கள். கப்பலின் இரு தளங்களில் ஆயுதங்களும் பிற போர்க்கருவிகளும் ஏற்றப்பட்டன. எழுபது மீட்டர் நீளமும் , கப்பலின் தடித்த நடுப்பகுதி பதினோறு மீட்டர் அகலமும் உடையது. நான்கு அடுக்குகளில் கீழ்தட்டில் உணவுப்பொருட்கள் அடுக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கை சுற்றி சிறியரக பீரங்கிகளைத் தாங்கும் மேடைகள் அமைக்கப்பட்டன. போர்வீரர்கள் படுத்து உறங்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இரு தளங்களையும் பயன்படுத்திக் கொண்டனராம்.


கப்பலைச் சுற்றிலும் மர வேலைப்பாடுகளைக் கொண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை ஐநூறு இருக்குமாம். இப்படியாய் நான்கு ஆண்டுகளில் முழுமை பெற்ற இக்கப்பலை நீரில் மிதக்கவிட்டனர். அந்த நேரத்தில் மன்னர் போலந்து நாட்டின்மீது போர் புரியச் சென்றிருந்தார். அவருக்கு போரில் உதவி செய்ய ஆயுதங்களும் வீரர்களும் தேவைப் பட்டனர். வாஸா தயாராகி விட்டதா என்று கேட்டு விரைவாகக் கட்டி முடிக்கவும் ஆணையிட்டார். கப்பல் கட்டி முடித்து வெள்ளோட்டம் பார்க்கும் முன்னர் கப்பலை அனுப்ப மன்னர் மீண்டும் அவசரப் படுத்தினார்.
1628-ஆம் வருடம் ஆகஸ்ட் மாத மதிய நேரம் ஒன்றில் வாஸா கடற்பயணம் மேற்கொள்ளத் தயாரானது. இருநூரு படை வீரர்களையும் ஏராளமான ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு குண்டுகள் முழங்க தனது முதற்பயணத்தைத் தொடங்கியது. பயணம் மேற்கொண்ட சில நிமிடங்களில் பலத்த காற்று வீச ஆரம்பிக்க , காற்றில் நிலை கொள்ளாது தள்ளாடி கடலில் கவிழ ஆரம்பித்தது.


கப்பலில் இருந்தவர்களுள் பலர் நீந்தித் தப்பித்தனர். சுமார் ஐம்பது பேர் மூழ்கி மாண்டனர். முழுவதுமாய் மூழ்கி சுமார் முப்பது மீட்டர் ஆழத்தில் புதைந்து போனது.